நகைக்கடனுக்கு ரூ.20,000 மட்டுமே ரொக்கமாக வழங்க வேண்டும்: ரிசர்வ் வங்கி உத்தரவு
தங்க நகைக் கடனுக்கு அதிகபட்சம் ரூ.20,000 மட்டுமே ரொக்கமாக வழங்க வேண்டும் என்றும், அதற்கு மேலான தொகை காசோலையாக வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.
முன்னதாக இந்த வரம்பு ஒரு லட்ச ரூபாயாக இருந்தது. தற்போது 20,000 ரூபாயாக ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது.
முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தின் இயக்குநர் ஜார்ஜ் முத்தூட் கூறும்போது ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. சராசரியாக நாங்கள் வழங்கும் கடன் அளவு 35,000 முதல் 40,000 ரூபாய். இதனால் சிறு கடன் வாங்குபவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என்றார்.
இதனால் தங்க நகைக்கடன் பிரிவில் செயல்பட்டு வரும் வங்கி அல்லாத நிதி நிறுவன பங்குகள் வெள்ளிக்கிழமை கடுமையாக சரிந்தன. இதனால் இந்த பங்குகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.