தேர்தலில் தோற்றதால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட வேட்பாளர்
தேர்தல் என்றாலே வேட்பாளர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாக்காளர்கள் பணம் பெறுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் பஞ்சாயத்து தேர்தலில் தோல்வி அடைந்ததால் ஓட்டுக்கு கொடுத்த பணத்தை வேட்பாளரின் கணவர் திருப்பி கேட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடந்து வருகிறது.
ஆர்யபேட் மாவட்டம் ஜெஜிரெட்டிகுடேம் கிராமத்தில் நடந்த கிராம பஞ்சாயத்து வார்டு தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக உப்பு பிரபாகர் என்பவரின் மனைவி ஹேமாவதி போட்டியிட்டார். இவர் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம், மது ஆகியவற்றை கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ஹேமாவதி வெறும் 24 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
இதையடுத்து உப்பு பிரபாகர் வீடு வீடாக சென்று தான் ஓட்டுக்காக கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். அவர் பணத்தை திரும்பி கேட்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
உப்பு பிரபாகர் வீடு வீடாக சென்று தனது மனைவிக்காக ஓட்டு கேட்டார். குடம் சின்னத்தில் அவரது மனைவி ஹேமாவதி போட்டியிட்டதால் வாக்களர்களுக்கு குடங்களை கொடுத்தார். அதனுடன் மது மற்றும் பணம் கொடுத்தார். ஆனால் ஹேமாவதி மொத்தம் உள்ள 269 ஓட்டுகளில் 24 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனால் உப்பு பிரபாகர் வீடு வீடாக சென்று ஓட்டுக்காக தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டார்.
தனது மனைவிக்கு ஓட்டு போடாததால் அந்த பணம் எனக்கு சொந்தமானது எனவே பணத்தை திருப்பி கொடுங்கள் என்று மிரட்டினார். ஒரு தட்டில் மந்திரிக்கப்பட்ட அரிசியை நிரப்பி அதில் மஞ்சள் தூளை வைத்து தனது மனைவிக்குத்தான் ஓட்டு போட்டீர்களா என்று சத்தியம் கேட்டார்.
அப்படி சத்தியம் செய்யாதவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டார். இதனால் பயந்து போன கிராம மக்கள் உண்மையை சொல்லி பணத்தை திருப்பி கொடுத்தனர். வேட்பாளரின் கணவர் வாக்காளர்களிடம் பணத்தை திருப்பி கேட்கும் வீடியோவால் தெலுங்கானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.