திருமணத் தடை நீங்க வேண்டுமா? பைரவரை வழிபடுங்கள்
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், பைரவருக்கு விபூதி அபிஷேகத்துடன், வடைமாலை அணிவித்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால், திருமணத் தடை அகலும் என்பார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகாலத்தில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். வளர்பிறை அஷ்டமி திருநாட்களில் அல்லது வெள்ளிக்கிழமை மாலை வேளையில், வில்வம் மற்றும் வாசனை மலர்களை சமர்ப்பித்து பைரவருக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வறுமைகள் நீங்கும்.
செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் சகலவிதமான தோஷங்களும் விலகும். மகாபைரவரை திரிபுர பைரவராகவும் வழிபடும் வழக்கம் உண்டு. கரைசேர முடியாத பெருந்துன்பங்களையும் நீக்கி அருள்புரிவாராம் திரிபுர பைரவர்.
கோயில்களில் நடைபெறும் பிரமோற்ஸவத்துக்கு முன்பாகவும், விழா முடிந்த பின்னரும் பைரவரை வழிபட வேண்டும் என்கின்றன ஆகம நூல்கள். முன்பெல்லாம், சிவாலயங்களில் இரவில் பைரவரை பூஜித்து வழிபட்டு, ஆலயக் கதவுகளை மூடி சாவியை அவரது சன்னதியில் சமர்ப்பிப்பது வழக்கம். இப்போது, கைமணியையும் கலசத்தையும் அவர்முன் வைத்துச் செல்கின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.