தாயின் கையை பிடித்து நடந்த குழந்தை: திடீரென பலியான பரிதாபம்

தாயின் கையைப் பிடித்து சாலையில் நடந்து சென்ற ஐந்து வயது பெண் குழந்தை திடீரென விபத்தில் பலியான சம்பவம் ஓமலூர் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த மணிமேகலை என்ற பெண்ணின் ஐந்து வயது மகள் வர்ஷா ஸ்ரீ. நேற்று மணிமேகலை தனது மகளை கடைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். இருவரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென வேகமாகவும் தாறுமாறாகவும் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று குழந்தையின் மீது பயங்கரமாக மோதியது

இதில் குழந்தை தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்ததை அடுத்து உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு தலைமறைவாகி விட்ட இளைஞரை தேடி வருகின்றனர். தாயின் கையைப் பிடித்துக் கொண்டு சாலையில் நடந்து சென்ற குழந்தை ஒன்று பரிதாபமாக பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply