‘தலாக்’ விவாகரத்து முறைக்கு எதிர்ப்பு. பொங்கி எழும் இஸ்லாமிய பெண்கள்
இந்து மதம் உள்பட பெரும்பாலான மதங்களில் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பும் கணவன், நீதிமன்றம் சென்று முறைப்படி விவாகரத்து பெற வேண்டும். இதற்கு ஒருசில மாதங்களோ அல்லது வருடங்களோ ஆகும். ஆனால் “தலாக், தலாக், தலாக்” என்று மூன்று முறைக் கூறினால் இஸ்லாமிய மதத்தில் மனைவியை விவாகரத்து செய்துவிடலாம். பெண்களை விவாகரத்து செய்யும் இந்த நடைமுறை இஸ்லாமிய மதத்தில் காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்து முறைக்கு தற்போஒது இஸ்லாமிய பெண்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்லாமிய பெண்களில் சிலர், இனிமேலும் இந்த கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாது என பொங்கி எழுந்துள்ளனர்.
பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கம் என்ற அமைப்பு தலாக் விவாகரத்து முறைக்கு எதிராக 4000 பேரிடம் நடத்திய கணக்கெடுப்பில், சுமார் 500 பெண்களுக்கு ‘தலாக்’ மூலம் விவாகரத்து ஆகியிருப்பது தெரிய வந்தது. இந்த இயக்கம் தற்போது, ‘தலாக்’ முறைக்கு எதிரான மனுவை தயாரித்துள்ளது. ‘தலாக்’ மூலம் விவாகரத்து செய்வது குரானிற்கு எதிரானது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தலாக் முறைக்கு எதிரான மனுவிற்கு 50,000-க்கும் மேற்பட்ட பெண்களும், 200 ஆண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தக் கொடிய முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மனுவில் கையெழுத்திட்ட பெண்கள் கூறியுள்ளனர்.
தற்போது Facebook, Whatsapp போன்ற சமூக வலைதளங்கள் வழியாகவும் சில ஆண்கள் தலாக் என்று கூறி விவாகரத்து செய்து வருகின்றனர். போதிய படிப்பறிவில்லாத பெண்கள் சட்ட ரீதியாக இதனை எப்படி அணுகுவது எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.
குரானில் எந்த இடத்திலும் ‘தலாக்’ விவாகரத்து முறை குறிப்பிடப்படாத நிலையில், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவாகரத்து முறையால் பல பெண்கள் மன ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
பாகிஸ்தான் உள்பட 21 நாடுகளில் தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ள போது, இந்திய பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று தலாக் முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். தலாக் விவாகரத்து முறையை எதிர்த்து அரசு சட்டம் கொண்டு வரவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.