தமிழ் பட்டப் படிப்புகளை வழங்க சுயநிதி கல்லூரிகள் முன்வரவேண்டும்: தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வேண்டுகோள்
தமிழ் பட்டப் படிப்புகளை வழங்க சுயநிதி கலை-அறிவியல் கல்லூரிகள் முன்வர வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் எஸ்.திருமகன் கூறினார்.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ் மன்ற தொடக்க விழாவில், அவர் பேசியதாவது:-
தமிழின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் எனப் பேசி வரும் நாம், தமிழகத்தில் அதன் நிலை என்ன என்பதை உணரத் தவறிவிட்டோம்.
அண்மைக்காலமாக, தமிழில் படிப்பவர்களுக்கு மதிப்பு அளிக்கப்படுவதில்லை. தமிழ் பட்டதாரிகளுக்கு நிறுவனங்கள் வேலைவாய்ப்பை மறுக்கின்றன. சுயநிதி பள்ளிகள், கல்லூரிகளில் பிற துறை ஆசிரியர்களைவிட, தமிழ் துறை ஆசிரியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே அளிக்கப்படுகிறது.
இந்த நிலை காரணமாக, தமிழ் பட்டப் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். முறையாகத் தமிழ் படித்தால் சிறந்த படைப்பாளியாக வரமுடியும். எழுத்தும், பேச்சும் சீர்படும். தமிழ் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவது எளிது என அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களே தெரிவிக்கின்றனர்.
அரசுக் கல்லூரிகளில் மட்டுமே தமிழ் துறைகள் உள்ளன. எனவே, சுயநிதிக் கல்லூரிகளும் தமிழ் துறைகளைத் தொடங்க வேண்டும். பிற துறை பேராசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.