தமிழ்நாட்டிற்கு வரும் நல்ல திட்டங்களை எதிர்க்க வேண்டாம்: அரசியல்வாதிகளுக்கு நீதிபதி அறிவுரை
தமிழ்நாட்டிற்கு வரும் நல்ல திட்டங்களை, அரசியலுக்காக, எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது ஏன்? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, புவனகிரியில், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி, கடலூர் மாவட்ட அ.ம.மு.க சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை, நேற்று விசாரணை செய்த செனை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தங்களுக்கு என்ன பாதிப்பு என மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
மாநிலத்துக்கு வரும் நல்ல திட்டங்களை பொத்தாம் பொதுவாக எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது ஏற்புடையதல்ல என்றார்.
அரசியல் ஆதாயத்திற்காகவே நடத்தப்படும் இதுபோன்ற போராட்டங்கள் மாநிலத்தை பின்னோக்கி எடுத்துச்செல்லும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கவலை தெரிவித்தார்.
தமிழகத்திற்கு வரும் எல்லா திட்டங்களுக்கும் போராட்டம் என்றால், எந்த திட்டத்தைத்தான் தமிழகத்தில் நிறைவேற்றுவது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு என்பதை முழுவதுமாக ஆய்வு செய்து, வெள்ளிக்கிழமையன்று தெரிவிக்கும்படி மனுதாருக்கு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அன்றைய தினத்திற்கே விசாரணையை ஒத்திவைத்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.