shadow

சொர்க்க வாசல்கள் திறப்பு: வைகுண்ட ஏகாதேசி கோலாகலம்

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு தமிழகம் முழுவதும் பெருமாள் ஆலயங்களில் இன்று அதிகாலையில் நடைபெற்றது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. விரதமிருந்து, கண்விழித்து காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.

பொதுமக்கள் அனைவரும் சொர்க்க வாசல் திறப்பை கண்டுகளிக்கும் வகையில் கோயிலுக்கு வெளியே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அதேபோல் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்திலும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. இந்த கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு ஆபரணங்கள் அணிந்து சொர்க்கவாசலில் எழுந்தருளினார்.

அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோவிந்தா, கோவிந்தா’ என்று பக்தி முழக்கமிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

 

Leave a Reply