shadow

சைவ உணவு சாப்பிட்டால் இதய நோய் வராதா?

1சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராது என்று சொல்கிறார்களே, இது எந்த அளவுக்கு உண்மை?

சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. காரணம், சைவ உணவு என்றால் முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை மட்டுமே சாப்பிட வேண்டும்.

ஆனால், சைவம் சாப்பிடுபவர்கள் வறுத்த, பொறித்த உணவு, எண்ணெயில் குளித்த இனிப்பு, நெய்யில் தயாரிக்கப்பட்ட பலகாரங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட், பால்கோவா, பால்பேடா, பாலாடைக்கட்டி போன்ற பாலில் தயாரிக்கப்பட்ட கொழுப்பு மிகுந்த உணவை அதிகமாகச் சாப்பிடுகின்றனர்.

இவர்கள் சாப்பிடும் உணவுகள் தரும் கலோரிகளைக் கணக்கிட்டால், அசைவம் சாப்பிடுபவர்களுக்கும், இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதன் விளைவாக, உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவது போன்ற மற்ற பிரச்சினைகளும், இவற்றால் உண்டாகிற மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய்களும் அசைவ உணவைச் சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுவதைப் போலவே, சைவ உணவுக்காரர்களுக்கும் ஏற்படுகின்றன.

உணவு அதிகம், உடற்பயிற்சி குறைவு

இன்னும் சொல்லப் போனால், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றுக்கு வரவேற்பு தருகிற உடல் பருமன் யாருக்கு அதிகம் இருக்கிறது என்று பார்த்தால், சைவ உணவைச் சாப்பிடுபவர்களுக்குத்தான் சைவ உணவு சாப்பிடுபவர்கள் உடற்பயிற்சி செய்வதில் அவ்வளவாக அக்கறை செலுத்துவதில்லை என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதுவும் உடல் பருமனுக்கு வழி அமைக்கிறது.

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம், அமெரிக்கா எமோரி பல்கலைக்கழகம், மெட்ராஸ் டயாபடிக் ரிசர்ச் ஃபவுண்டேஷன் ஆகிய மூன்றும் இணைந்து சமீபத்தில் மக்களின் உணவுப் பழக்கம் குறித்து ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டன. இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசியாவிலும், அமெரிக்காவிலும் வசிப்பவர்களின் உணவுப் பழக்கத்தை ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில், மேற்சொன்ன கருத்து உறுதிசெய்யப்பட்டுள்ளது.

100 சதவீதம் சைவம்

அமெரிக்காவில் சைவ உணவைச் சாப்பிடுபவர்கள் உணவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழு தானியங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்கின்றனர்; சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயின் பயன்பாட்டைப் பெரும்பாலும் தவிர்க்கின்றனர். எண்ணெயில் வறுத்த, பொறித்த உணவைக் குறைத்துக்கொள்கின்றனர். செயற்கைப் பழச்சாறுகள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட கார்பனேடட் பானங்களைக் குறைவாகவே அருந்துகின்றனர். இதனால் அங்குச் சைவ உணவைச் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு வருவது குறைந்துள்ளது. எனவே, சைவம் என்றால், அது 100 சதவீதம் சைவமாக இருக்க வேண்டும். அப்போதுதான் உரிய ஆரோக்கியப் பலன் கிடைக்கும்.

Leave a Reply