shadow

சைனஸ் சமாளிக்க…

11சைனஸ்… பலருக்கும் பெருந்தொல்லை. சைனஸ் தலைவலி அன்றைய நாளையே தலைகீழாகத் திருப்பிப் போட்டுவிடுகிறது. நம்முடைய முகத்தில் உள்ள காற்று அறைகள் நோய்த் தொற்று உள்ளிட்ட காரணங்களால் பாதிப்படையும்போது சைனஸ் ஏற்படுகிறது. அந்த நேரத்தில், முகம் வீங்கி, வெளியே செல்ல முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. எந்த நோயாக இருந்தாலும் அதை வரும் முன் தடுத்து, அதற்கேற்ற மருத்துவமுறைகளையும், வாழ்வியல் உத்திகளையும் பின்பற்றுவதே சிறந்த வழி. சைனஸ் பிரச்னைக்காகச் செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை என்னென்ன?

செய்யக் கூடாதவை

கடற்கரை போன்ற அதிகக் காற்று உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஜன்னல் ஓர சீட்டில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குளிர்பானங்கள், குளிர்ச்சியான காற்று, குளிர்ச்சியான உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

பகல் மற்றும் மதிய வேளையில் தூங்கக் கூடாது.

பால் பொருட்கள், தயிர், துரித உணவுகள், கோதுமை, மைதா, பானிபூரி, மசாலா பூரி, சாஸ், கெட்ச்அப், அதிகப் புளிப்பான உணவுகளைத் தவிர்க்கவும். ஃப்ரிட்ஜில் வைத்த உணவைத் தவிர்க்க வேண்டும். சூடுபடுத்திக்கூட சாப்பிட வேண்டாம்.

சைனஸ் வலி சமயத்தில் நீர் காய், பழங்களைச் சாப்பிடக் கூடாது.

ஐஸ் வாட்டர், ஐஸ் சேர்த்த பழச்சாறுகளைத் தவிர்க்க வேண்டும்.

தினந்தோறும் தலைக்குக் குளிக்கக் கூடாது. எண்ணெய் தேய்த்த நாளைத் தவிர எப்போதுமே வெந்நீரில் குளிக்கக் கூடாது. சாதாரண நீரில் குளிக்கலாம்.

கலர் போட்ட ஐஸ், ஸ்வீட்ஸ், கலர் சேர்த்த கேசரி, எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடக் கூடாது.

செய்ய வேண்டியவை

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், தலையில் ஹெல்மெட், முகத்தில் ஏர்-ஃபில்டர் (Air Filter) மாஸ்க் அணிய வேண்டும். வீடு சுத்தம் செய்யும்போது, மாஸ்க் அணிய வேண்டும்.

எண்ணெய் தேய்த்துக் குளித்தால், தலைவலி வருகிறது என்பவர்கள், நல்லெண்ணெயை சூடுசெய்து அதில் மிளகு, பூண்டு, சீரகம் போட்டு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

அரக்குத் தைலம், குறட்டைப்பழத் தைலம், சுக்குத் தைலத்தைப் பயன்படுத்திக் குளித்தால், சைனஸ் தலைவலி வராது.

தலைக்குக் குளித்த அன்று, தலையில் நீர்கோத்து வலி ஏற்பட்டால், கல்லுப்பு, மஞ்சள் தூள் போட்டு ஆவி பிடிக்கலாம். இதனுடன், நொச்சி இலை சேர்த்தால் பலன் இரட்டிப்பாகும்.

சுக்கை வெந்நீரில் இழைத்து நெற்றியில் பத்து போடலாம்.

கடைகளில் நீர்க்கோவை மாத்திரை கிடைக்கும். அதையும் வெந்நீரில் இழைத்து நெற்றி, மூக்கு ஓரங்கள், புருவத்துக்குக் கீழ், கண்களுக்குக் கீழ் பத்து போடலாம்.

தலைக்குக் குளித்த பின் கூந்தலை நன்றாகத் துவட்ட வேண்டும். சாம்பிரானிப் புகையில் கூந்தலை உலர்த்தலாம்.

கஸ்தூரி மஞ்சள் அல்லது விரலி மஞ்சளை நெருப்பில் காய்த்து, அந்தப் புகையை முகர்ந்தால், சைனஸ் வலியிருந்து தப்பிக்கலாம்.

Leave a Reply