பிரபல தமிழ் நடிகர் நாசரின் மகன் பைசல் நேற்று மகாபலிபுரம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் சென்ற அவரது நண்பர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வரும் நாசருக்கு நூருல்ஹசன் பைசல் என்ற 24 வயது மகன் உள்ளார். இவர் கம்ப்யூட்டர் கேம்ஸ் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கும் சைவம் படத்திற்கு இவர்தான் கம்ப்யூட்டர் டிசைனிங் செய்து வருகிறார்.
நேற்று பைசல் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்றுவிட்டு திரும்பி வரும்போது எதிரே வந்த டேங்கர் லாரி பயங்கரமாக மோதியதால் ஏற்பட்ட விபத்தில் நாசர் மகனும், அவருடைய நண்பர்களும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் பைசலின் நண்பர்கள் சையத் அபுநிகால்,ஜித்து, சங்கர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களில் சையத் அபுநிகால் நாசரின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
படுகாயம் அடைந்த நாசர் மகன் பைசல் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது பைசல் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் நடிகர் நாசர் மகன் பைசலை பார்ப்பதற்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு திரைஉலகத்தை சேர்ந்தவர்கள் திரண்டு வந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும் நடிகருமான சரத்குமார், அவரது மனைவி ராதிகா, நடிகர் கமல்ஹாசன், பிரசாந்த், ஜெயராம், சித்தார்த், பாண்டியராஜன், அருண்பாண்டியன், சண்முகராஜன் நடிகைகள் வரலட்சுமி, கவுதமி, டைரக்டர்கள் பாலா, விஜய், வெங்கட்பிரபு, சேரன், மிஸ்கின், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், செலாளர் டி.சிவா, துணைத்தலைவர் டி.ஜி. தியாகராஜன், எஸ்.தாணு, சித்ராலட்சுமணமன், கே.எஸ்.சீனிவாசன், கதிரேசன், தேனப்பன், ஏ.எல்.அழகப்பன், பட அதிபர் யூ.டி.வி. தனஞ்செயன் உள்ளிட்ட திரைஉலகினர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து பைசலை பார்த்து சென்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.