சென்னை அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

சென்னை அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் அனுமதியின்றி, அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1989ம் ஆண்டு அண்ணாநகர் டவர் கிளப்பிற்கு, சென்னை மாநகராட்சி 5,827 சதுர அடி நிலம் ஒதுக்கியது. ஆனால் விஸ்வேஸ்வரய்யா பூங்கா அருகில் காலியாக இருந்த 31 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் கிளப் பயன்படுத்தி வந்ததாகவும், அந்த நிலத்தில் அனுமதியின்றி கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி புகார் கூறியது.

மேலும் டவர் கிளப்பிற்கு கொடுத்த நிலத்தின் ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதாலும், ஒப்பந்தத்தை புதுப்பிக்காததாலும், நிலத்தை பயன்படுத்தியதற்காக 48 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை செலுத்தி விட்டு, இடத்தை காலி செய்யும்படி, கிளப் நிர்வாகத்திற்கு 2012ம் ஆண்டில் மாநகராட்சி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை சென்னை உரிமையியல் நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாநகர் டவர் கிளப் நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன், சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என்றும், அதை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் எனவும் கூறி, டவர் கிளப் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply