shadow

‘சும்மா’ இருக்கற நேரத்துல இதெல்லாம் செய்யலாமே..!

ஒரு நாளைக்கு வேலை நேரம் போக மற்ற நேரங்களில் என்ன செய்கிறோம் என யோசித்திருக்கிறோமா? கொஞ்சம் யோசித்துப்பாருங்க, வெட்டியாத்தான் இருப்போம். இல்லைன்னா நமக்கு உபயோகமில்லாத வேலையைச் செஞ்சிட்டிருப்போம். ‘சும்மா இருக்கிறது ஒண்ணும் ஈஸி இல்லை பாஸ்’னு வடிவேல் வாய்ஸ்ல நீங்க சொல்றது கேட்குது. இருந்தாலும் காலம் பொன் போன்றதுங்கிறதால அதை எப்படி நமக்கு உதவுற மாதிரி மாத்தலாம்னு பார்க்கலாமா..?

சும்மா

புத்தகம் படிக்கலாம்:

நேரத்தை நமக்கு உபயோகமாக மாற்றுவதற்கு அருமையான வழிகளில் ஒன்று, புத்தகம் படிப்பது. இதனால் உங்களின் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள புத்தகம் உதவும். ஒவ்வோர் அனுபவத்தையும் நீங்கள் தேடித் தேடி அனுபவிக்க முடியாது. ஆனால், புத்தகம் வாசிப்பதால் உங்களால் பல அனுபவங்களைப் பெற முடியும். ஆனால், அதைத் திரையில் படிப்பதைவிட காகிதத்தில் படிப்பது நல்லது.

இயற்கையை ரசிக்கலாம்:

அதிகாலையில் பறக்கும் பறவைகளைப் பார்த்தால், உங்கள் மனமும் பறப்பதற்கான ஆற்றலை பெற்றுவிடும். மரங்களை ரசித்துப் பாருங்கள். உங்களுக்குள் பசுமை துளிர்விடும். மலைகளை ரசித்துப் பாருங்கள், உயரம் செல்வதற்கான வழி தென்படும்.

உடற்பயிற்சி:

வேலை நேரங்களில் மூளைக்கு வேலைகொடுக்கும் நாம், மற்ற நேரங்களில் உடலுக்கு வேலை தர மறந்துவிடுகிறோம்.
சும்மா இருக்கும் நேரங்களில்கூட சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். வேலைகள் எல்லாம் முடித்த பிறகு, நீங்கள் செய்யும் அரை மணி நேர உடற்பயிற்சி, நீங்கள் இழந்த புத்துணர்ச்சியை மீட்கும்.

இசையைக் கற்றுக்கொள்ளுங்கள்:

`இப்பவே சும்மா இருக்கும்போது ஹெட்செட்ல பாட்டுதானே கேட்குறோம்’னு சொல்கிறீர்களா… பாடல்கள் கேட்பது நல்ல பொழுதுபோக்குதான். ஆனால், எத்தனை நாளைக்குதான் கேட்க மட்டுமே செய்வீர்கள்? அதனால் இசையை இசைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். கிட்டாரோ, கீபோர்டோ வாசிக்கக் கத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், இசை உங்களை மட்டும் அல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்விக்கும்.

கற்றுக்கொள்ளுங்கள்… பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்:

நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களைப் பிறருக்கும் கற்றுகொடுங்கள். அது உங்கள் அனுபவமாக இருக்கலாம், உங்களுக்குத் தெரிந்த விஷயமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பிறருக்குக் கற்றுக்கொடுங்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா, விளையாடக் கற்றுக்கொடுங்கள். வயதானவர்கள் இருக்கிறார்களா, அவர்களிடமிருந்து அனுபவத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுக்கும் பொழுதுபோகும் அவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

மனிதர்களோடும் கொஞ்சம் பேசுங்க பாஸ்!

டிஜிட்டல் உலகில் இருக்கும் நாம், அந்த மயக்கத்திலேயே நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை மறந்துவிடுகிறோம். வேலை நேரத்தை விடுங்க, மற்ற நேரங்களிலாவது அவர்களிடம் பேசலாமே! `எப்படி இருக்க?’ எனக் கேட்பதற்குப் பதிலாக `பேசி ரொம்ப நாள் ஆச்சுல்ல’ என்றுதான் ஆரம்பிக்கிறது இன்றைய நண்பர்களின் தொலைபேசி உரையாடல்கள். சும்மா இருந்தால், உங்க நண்பர்களுடன் ஒரு ஜாலி அரட்டை அடிங்க!

உதவி செய்யுங்கள்:

வீட்டிலோ, பொது இடங்களிலோ முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யுங்கள். உதவி செய்வதில் கிடைக்கும் திருப்தி, வேறு எதிலும் கிடைக்காது. அலுவலக வேலை முடிந்து வந்ததும் வீட்டில் இருக்கும் வேலைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Leave a Reply