shadow

சிவனார் சேவடி போற்றி!

p8cகோயில் என்றும் தில்லைமூதூர் என்றும் அன்பர்களால் கொண்டாடப்படும் சிதம்பரத்தின் தோற்றம் பற்றிய செய்திகள் பலவாறு முயன்ற போதிலும் அறிய முடியா பழைமையாக உள்ளது. பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த பரம்பொருள் அதன் இருதயத்தானமாகச் சிதம்பரத்தை தோற்று வித்தது. அதிலிருந்தவாறே தாம் படைத்த பிரபஞ்சத்தை இயக்கத் தொடங்கியது. இருதயத் தானமாகிய அப்புண்டரீகபுரத்தில், தாம் ஆடும் பரமானந்தத் தாண்டவத்தால், பிரபஞ்சத்தில் ஓயாது ஐந்தொழிலை நடத்தி அதை ஆட்டுவிக்கின்றது.

பரமாகாசமாக விரிந்துள்ள இடமாம் தில்லை சிற்சபையாக விளங்க, அதனுள் தமது ஆனந்தத் தாண்டவத்தைப் பெருமான் ஆடிக்கொண்டிருக்கின்றார். ஆம்! பலகோடி யுகங்களைக் கண்ட புண்ணிய பூமியாகத் தில்லை விளங்குகிறது. தில்லையை தரிசித்தாலே முக்தி என்கிறது பழைய புராணம். சிதம்பரம் மட்டும்தானா? இன்னும் இன்னும் என்று பற்பல தலங்களில் ஐயன் தன் திருத்தாண்டவக் கோலம் காட்டி நம்மை மகிழ்விக்கவே செய்கிறார். வரும் ஆனித் திருமஞ்சன வைபவத்தின்போது (ஜூலை-10), அந்தத் தலங்களுக்குச் சென்று ஆடலரசனைத் தரிசிப்பது, அவ்வளவு விசேஷம்!

அவ்வாறு தரிசிக்கச் செல்லுமுன் அந்தத் தலங்களின் பெருமைகளை அறிந்து மகிழ்வோம்!

கீழ்வேளூர் அட்சய தாண்டவம் :

நாகப்பட்டினம் – திருவாரூர் வழியில் உள்ள கீழ்வேளூர் பாடல் பெற்ற பதியாகும். இங்கு பெருமான் பத்து கரங்களுடன் அட்சய தாண்டவத்தை ஆடுகிறார். இது பெருமான் ஆடும் காப்புத் தாண்டவமாகும். வலது காலின் குதிகாலை மட்டும் சற்று உயர்த்தி ஸ்வஸ்திக நிலையில் வைத்துள்ளார். பிரமனும் லட்சுமியும் கர தாளமிட, நந்தி மத்தளம் முழக்க, இந்திரன் வேணுகானம் இசைக்க, திருமால் மிருதங்கம் வாசிக்க, பெருமான் ஆடும் கூத்தை அகத்தியரும் லோபா முத்திரையும் கண்டுகளிக்கின்றனர். இதனை சந்தியா தாண்டவம் எனவும் அழைக்கின்றனர்.

இருந்தபடியே ஆடும் யோகாசபைக் கூத்து:

நடராசப் பெருமான் நின்றபடியிருந்து திருவடியையும் கரங் களையும் எடுத்து வீசி ஆடுகின்றார். அது நின்றாடும் கூத்து எனப்படுகிறது. அவரே அமர்ந்தபடியே யோகராஜனாக இருந்தும் ஆடுகின்றார். அது இருந்தாடும் கூத்து எனப்படுகிறது.

இருந்தாடும் கூத்துக்கு உரியவர் தியாகராஜர் எனப்படுகிறார். அவர் இருந்தபடியே ஆடும் இடமும் சபை என்றே அழைக்கப்படுகிறது. அதில் அரச சபைக்குரிய வீரவாள், அஷ்டமங்கலம், இன்னிசை ஆடல் பாடல்களும் நிறைந்திருக்கின்றன. தியாகராஜரின் நடனம் யோகியர்களால் கொண்டாடப்படும் சபையாதலின் யோகசபை எனப்படுகின்றது. பிரபஞ்சத்தை நடத்துபவனாகச் சபையில் கொலுவீற்றிருக்கும் இறைவனும் சபாநாயகன் எனப்படுகிறார். திருவாரூர் தியாகராஜ தரிசனம் சிறப்புக்கு உரியது.

திருவெண்காட்டு உற்பத்தித் தாண்டவம்:

திருவெண்காட்டினைப் புராணங்கள் ஆதிசிதம்பரம் என்று போற்றுகின்றன. பிரம்மன் இந்த வெண் காட்டின் நடுவே யோகத்தில் அமர்ந்தான். அவன் சமாதி நிலையில் இருந்து சிவனைத் தியானித்தான். அவனுடைய எண்ண வெளியில் சிவபெருமான் ஆதிமூர்த்தியாகத் தோன்றி உற்பத்தித் தாண்டவத்தை ஆடினார். ஆதியில் பிரம்மனுக்கு உற்பத்தியை அளித்து நடனம்புரிந்த இடமாதலின், இது ஆதி சிதம்பரம் எனப் படுகிறது.

காத்தல் தாண்டவம்:

உலகில் படைக்கப்பட்ட உயிர்கள் வாழ்வதற்கும், அவை தான் செய்த செயல்களால் விளைந்த வினைப் பயனால் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்து அதிலிருந்து விடுபட்டு மேன்நிலை பெறவும், சிவபெருமான் காத்தல் தொழிலை நடத்துகின்றார். காத்தல் தொழில் இரண்டு நிலையில் நடைபெறுகிறது. முதலாவது நிலையை அருளிக் காத்தல் என்றும், இரண்டாவது நிலையை அழித்துக் காத்தல் என்றும் கூறுவர்.

சிவபெருமான் அருளிக்காத்தல் தாண்டவ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் தலம் மதுரை. அங்குள்ள வெள்ளியம்பலத்தில் சந்தியா தாண்டவராக அவர் விளங்குகிறார். அடுத்து அழித்துக் காத்தல்.

சிவபெருமான் வைரவ கோலத்துடன் கஜ சம்ஹாரராக வழுவூர் வீரட்டகாசர் ஆலயத்தி லுள்ள பெரிய சபையில் எழுந்தருளியுள்ளார். இந்த சபையை ஞான சபை என்கின்றனர். அன்பர்கள் இந்தச் சபையை, இறைவனின் எழுவகைத் தாண்டவமாடிய சபைகளில் ஒன்றாகக் கொள்ளவில்லை. ஆனால், சிவபெருமான் வைரவ மூர்த்தியாகச் சிறப்புடன் எழுந்தருளியுள்ள திருப்பத்தூரில் உள்ள சபையை சப்த தாண்டவ சபைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். திருப்பத்தூர் புராணம், இந்த சபையை கெளரி தாண்டவ சபை என சிறப்பித்துப் பேசுகிறது.

புரட்டாசி மாத பெளர்ணமி நாளில் சந்தியா தாண்டவர் எனப்படும் காப்புத்தொழில் புரியும் நடராசரை வழிபடுவதால் பெருஞ்செல்வமும் மன அமைதியும் உண்டாகுமென்று பூஜா பத்ததி நூல்கள் கூறுகின்றன.

வீரட்டகாசர் விரும்பும் சபைகள்:

சிவபெருமான் உயிர்களைக் காப்பதற்கும், பகைவர்களை வெல்வதற்கும் கொண்ட கோலங்கள் வீரட்டகாசக் கோலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கோலத்துடன் பெருமான் எழுந்தருளியுள்ள இடங்களும், சபைகள் என்றே அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக காமனை வென்றொழித்த இடமான கொருக்கை வீரட்டத்திலுள்ள சபை காமாங்கினி நாசசபை என்றும், திருக்கடையூரில் உள்ள காலசம்ஹார சந்நிதி காலாந்தக சபை என்றும், வழுவூரில் கஜசம்ஹாரர் எழுந்தருளியுள்ள சபை ஞானசபை என்றும் அழைக்கப்படுகின்றன. வழுவூரில் ரகசிய யந்திரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் ஐம்பெரும் சபைகள்:

மதுரை சோமசுந்தர பெருமான் ஆலயத் தில் வெள்ளியம்பலம் சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது. மேலும், மற்ற நான்கு சபைகளை நினைவூட்டும் வகையில் நான்கு அம்பலங்கள் தனித்தனியே உண்டு என்பர்.ஆயிரங்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், மகாமண்டபத்திலுள்ள வெள்ளியம்பலம் ஆகிய மூன்றிலும் பெரிய அளவிலான நடராஜ மூர்த்தியின் திருவுருவத்தை இப்போது கண்டு மகிழ்கிறோம். மற்றைய இரண்டு அம்பலங்கள் பற்றிய செய்தி தெரியவில்லை.

இந்த ஐந்து சபைகளுக்கும் உரியதாக ஐந்து நடராஜப் பெருமானின் உலாத்திருமேனிகள் உள்ளன. திருவாதிரை நாளில் இந்த ஐந்து நடராசர் மூர்த்தங்களும் திருவீதி உலா காண்கின்றனர். இவற்றில் இரண்டு நடராச வடிவங்களில் பெருமான் இடது காலை ஊன்றி வலது காலை வீசியாடும் கோலத்தில் உள்ளார்.

கோட்டை கோயிலில் நடராஜர்

சரித்திரப் புகழ்பெற்ற வேலூருக்குப் புராணப் பெருமையும் உண்டு. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் படங்களில் நீங்கள் தரிசிக்கும் நடராஜ பெருமான் அருள்வது, வேலூர் கோட்டை கோயிலில்தான்.

பெரும் அகழியுடன் கூடிய வேலூர் கோட்டை சுமார் 1.36 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இங்குள்ள ஆலயத்தில் அகிலாண்டேஸ்வரியுடன் அருள்பாலிக்கிறார் அருள்மிகு ஜலகண்டேஸ்வரர். இந்த கோட்டைக் கோயில், சிவபக்தி மிகுந்த பொம்மி என்ற பக்தரால் எழுப்பப்பட்டது என்று புராணம் கூறும் இக்கோயில், பக்தர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய ஒன்று.

Leave a Reply