shadow

சாப்பிட்டவுடன் செய்யவே கூடாத 6 விஷயங்கள்!

காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு முடித்ததும் ரொட்டீனாக சில பழக்கங்களைப் பலர் பின்பற்றுகிறார்கள்.

உணவு

இனிப்பு சாப்பிடுவது, பீடா போடுவது, புகைபிடிப்பது என நீளமான பட்டியலே அதற்கு உண்டு. உண்மையில் உணவு உட்கொண்டவுடன் செய்யவே கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்

புகைபிடிப்பது

பெரும்பாலானோர் சாப்பிட்டு முடித்ததும் புகைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தவறான பழக்கம். இயல்பாகவே புகைபிடிப்பது உடலுக்கு தீங்கு எனும் பட்சத்தில், சாப்பிட்டு முடித்தவுடன் புகைப்பிடிப்பது செரிமானத்தை விரைவில் நடத்தவிடாமல் தடுத்து அஜீரணத்தை உண்டாக்கும். எனவே, புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற இரண்டு பழக்கங்களையும் சாப்பிட்டு முடித்தவுடன் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

திரவ உணவுகள் உட்கொள்வது

திடமான உணவுகளை காலை அல்லது மதிய உணவாக உட்கொண்ட பின்னர், திரவ உணவுகளான பழச்சாறு போன்றவற்றை உடனடியாக அருந்தக் கூடாது. ஏனெனில், இது செரிமானச் சாறுகள் எனப்படும் Digestive juicesகளை உருவாகவிடாமல் தடுக்கும். மேலும், மதிய வேளைகளில் உட்கொள்ளும் டெசர்ட்ஸ்-ஐ சிறிதளவே எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் மதிய உணவில் தயிர் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் தயிருக்கு முன்னதாக சாப்பிடுவது சிறந்தது. இதுதான் நம் முன்னோர் பின்பற்றி வந்த பழக்கமும்கூட.

தூக்கம்

சாப்பிட்டு முடித்தவுடன் உறங்குவது பெரும்பாலானோரின் பழக்கமாக இருக்கிறது. இது மிகவும் தவறான ஒன்று. அஜீரணத்துக்கு முக்கியக் காரணியாக விளங்குவது, இதுதான். உணவு உட்கொண்டதும் தூங்குவதைவிட, சாப்பிட்ட உணவு செரிமானமாவதற்கு போதுமான நேரத்தை ஒதுக்கி, செரிமானம் சீக்கிரம் நடைபெற நடப்பது, நேராக அமர்ந்து புத்தகம் படிப்பது என ஏதேனும் ஒன்றைப் பழக்கத்தில் கொண்டு வரலாம். மேலும், சாப்பிட்டவுடன் தூங்குவது உடல்பருமனாக முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

உடற்பயிற்சி மேற்கொள்வது

உடற்பயிற்சி செய்வதற்கு தகுந்த நேரம் மிகவும் அவசியமான ஒன்று. அதிகாலை அல்லது மாலை வேளைகளில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி மேற்கொள்வது பரிந்துரைக்கப்பட்ட ஒன்று. ஆனால் நேரமின்மையைக் காரணம் காட்டி சிலர் காலை உணவுக்குப் பின்னரும், மதிய வேளைகளிலும் உடற்பயிற்சி செய்கிறார்கள். இது முற்றிலும் தவறான ஒன்று. இதனால் வயிற்றுப் பிடிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குளிப்பது

முடிந்தவரை காலை எழுந்தவுடன் பல் துலக்கி, குளித்துவிடுவது சிறந்த பழக்கம். முடியாத பட்சத்தில் காலை உணவுக்கு முன்னதாகக் குளிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் குளிப்பதால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மாறாக எந்த நேரமாக இருந்தாலும், சாப்பிட்டு முடித்தவுடன் குளிப்பது தவறு. இதனால் கை மற்றும் கால்களில் ரத்த ஓட்டம் இயல்பைவிட வேகமாக இருக்கும். உடல், ஜீரணத்துக்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, அதைத் தொந்தரவு செய்யும் வகையில் எதையும் செய்யாமல் இருப்பதுதான் ஜீரணத்தை விரைவுபடுத்தும். எனவே, குறைந்தபட்சம் இரண்டு மணி நேர இடைவேளை சாப்பிடுவதற்கும் குளிப்பதற்கும் இடையில் இருக்க வேண்டும்.

டீ,காபி அருந்துவது

டீ, காபியில் உள்ள ஆக்சலேட் மற்றும் ஃபைலேட், உடலில் ஏற்படும் அயர்ன் அப்சார்ப்ஷன் (Iron absorption)-ஐ சரியாக நடக்கவிடாமல் தடுக்கும். எனவே, சாப்பிட்டு முடித்தவுடன் டீ மற்றும் காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

Leave a Reply