shadow

சபரிமலைக்கு செல்கிறவர்கள் பிரம்மச்சரிய விரதத்தை கடுமையாக அனுஷ்டிக்க சொல்வது ஏன்?

1மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்த அசுரன் மகிஷனை தேவி சம்ஹரித்தவிவரம் தேவி மகாத்மியத்தில் வருகிறது. இந்த மகிஷாசுரனுக்கு மகிஷி என்ற ஒரு சகோதரி. இவள் பழிக்குப்பழி வாங்குவதாக சபதம் செய்து பிரம்மாவைக் குறித்து கடுமையான தவத்தை மேற்கொண்டாள்.

பிரம்மாவும் அவள் முன் தோன்றினார். அவரிடம் மகிஷி மூன்று வரங்களைக் கேட்டாள். முதல் வரத்தால் பதினான்கு உலகங்களையும் தன் வசமாக்கிக்கொண்டாள். தன் ரோமங்களிலிருந்து தன்னைப் போன்ற வீராங்கனைகள் தோன்ற வேண்டும் என்பது இரண்டாவது வரம். மூன்றாவது வரம் ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் பிறக்கும் ஒருவரால்தான் தனக்கு மரணம் உண்டாக வேண்டும் என்றும், அவர் 12 ஆண்டு காலம் மனித குலத்தில் வசித்து பிறகு பிரம்மச்சரிய பலத்தால்தான் தன்னை கொல்ல வேண்டும் என்றும் அவன் கேட்டுப் பெற்றாள்.

ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்காது. அப்படியே பிறந்தாலும் அது 12 வயது வரை உயிரோடிராது. அப்படியே இருந்தாலும் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்காது. ஆகவே தனக்கு மரணம் என்பது இல்லை என்பது மகிஷியின் எண்ணம்.

ஐயப்பன் பூவுலகில் பம்பை நதிக்கரையில் குழந்தையாகப் பிறந்து பந்தள அரசனால் வளர்க்கப்பட்டு புலிப்பாலுக்காகக் காட்டுக்குச் சென்ற போது மகிஷியை சம்ஹரித்தார். அவள் பூத உடல் வளரவே அவள் மீது கல்லை போட்டு அவ்வளர்ச்சியை நிறுத்தினார்.

சபரிமலை யாத்திரையில் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் கன்னி ஐயப்பன்மார் நதியில் ஸ்நானம் செய்யும் போது கிடைக்கும் கல்லை இந்த இடத்தில் போடுவது இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது.

மகிஷியின் உடல் மீது ஐயப்பன் நடனம் செய்ததால் சாபம் நீங்கியது. மகிஷி ஒரு சுந்தரவதியாகக் தோன்றினாள். இவள் ஐயப்பனை மணக்க விரும்பினாள். ஐயப்பன் அவள் மீது கருணை கொண்டு உனக்கு இனி மஞ்ச மாதா எனப் பெயர். நான் பிரம்மச்சரிய விரதத்தை அனுஷ்டிக்க முடிவு செய்திருப்பவன்.

இருந்தாலும் மகா உற்சவத்தின் போது இந்த கல்லிடம் குன்றில் என்று கல் விழாமல் இருக்கிறதோ, சரங்குத்தி மரத்தில் சரம் குத்தப் படாமல் இருக்கிறதோ அன்று உன்னை மணந்துக் கொள்கிறேன் என்றாராம். கல் விழாமல் இருப்பதும் இல்லை. சரங்குத்தியில் சரம் இல்லாமல் இருப்பதில்லை. ஆகவே ஐயப்பன் நித்திய பிரம்மசாரியாகவே இருந்து வருகிறார்.

Leave a Reply