கென்ய ஆசிரியருக்கு சர்வதேச ஆசிரியர் விருது: குவியும் வாழ்த்துக்கள்

துபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் 5வது முறையாக வருடாந்திர சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது, இதில் சிறந்த ஆசிரியருக்கான விருதினை கென்யாவைச் சேர்ந்த பீட்டர் தபசி என்ற 36 வயது இளம் ஆசிரியர் வென்றார். இவர் கென்யாவின் வானி கிராமத்தில் உள்ள கெரிக்கோ மிக்ஸ்ட் டே பள்ளியில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ஆவார். இவர் தனது சம்பளத்தின் 80 சதவீதத்தினை ஏழை குழந்தைகளின் கல்விக்கு செலவிடுகிறார். மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், வறுமையில் இருந்து மீள்வது குறித்தும் பேசி, அவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கி வருகிறார்.

தனக்கு சிறந்த ஆசிரியர் விருது கிடைத்தது குறித்து பீட்டர் தபசி கூறியதாவது: ஆப்பிரிக்காவில் தினந்தோறும் புதிய பக்கத்தையும், புதிய அத்தியாயத்தையும் சந்திக்கிறோம். இப்போது நான் பெற்ற விருது எனக்கானது அல்ல. எனது நாட்டின் மாணவர்களுக்கானது. என் மாணவர்களின் சாதனைகளாலேயே நான் இங்கு வந்திருக்கிறேன். இந்த விருது அவர்கள் மேலும் சாதிக்க ஒரு வாய்ப்பாக அமையும். சர்வதேச அளவில் 10 இறுதிப்போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இதில் நான் இவ்விருதினை பெற்றுள்ளேன். இதுவே மிகப்பெரும் உத்வேகம் தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply