shadow

குழந்தைகளுக்கு மேக்கப் போடும்போது கவனிக்க வேண்டியவை

1குழந்தைகளின் சருமம் மிக மென்மையானதாக இருக்கும். அவர்களுக்கு மேக்-அப் போடும் போது, பாதுகாப்பான மற்றும் மென்மையான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவது நல்லது. பள்ளி விழாக்கள் மாறுவேடப் போட்டிகள் போன்றவற்றிற்காக உங்கள் குழந்தைகளுக்கு மேக்-அப் போட்டு அனுப்பும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக மேக்- அப் போடுவது எப்படி என்று பார்க்கலாம்.

* தண்ணீர் அல்லது சிலிக்கானை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துங்கள். அவை மிதமானதாக இருக்கும். குறைந்த அலர்ஜி கொண்ட (ஹைப்போ-அலர்ஜனிக்) என்று குறிப்பிடப்பட்டுள்ள அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது. இவை பொதுவாக, எரிச்சலூட்டும் பொருட்கள் எதுவும் இன்றி, குறைந்த நிறமிகள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும். இவ்வகை மேக்-அப்பில் எரிச்சலூட்டும் மற்றும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதுவும் இல்லாததால், அவற்றை குழந்தைகளுக்கு பயன்படுத்துவது நல்லது.

* தண்ணீரில் கரையாத (வாட்டர் புரூப்) மற்றும் கறை உண்டாக்காத ‘ஐ’ லைனர்களை பயன்படுத்தலாம். ஏனென்றால், குழந்தைகள் அடிக்கடி தங்கள் கண்களை தேய்த்துக் கொள்வர். அப்போது இவை அழியாமல் இருக்கும்.

* வண்ண லிப் பாம்கள், குழந்தைகளின் உதடுக்கு நிறம் கொடுப்பதோடு, அவர்களின் உதடுகள் உலராமல் ஈரப்பதத்துடன் இருக்க உதவுகிறது.

* கழுவினால் அகன்று விடும் வகையிலான நெயில் பாலிஷ்கள் பயன்படுத்தலாம். இதனால், சாப்பிடும் போது குழந்தைகளின் வயிற்றுக்குள் நெயில் பாலிஷ் பெயின்ட்கள் சென்றுவிடும் என்ற அச்சம் இருக்காது.

* எப்போதும் மென்மையான பீச், பிங்க் போன்ற கலர்களையே குழந்தைகளுக்கு தேர்ந்தெடுப்பது சிறந்தது. குழந்தைகளுக்கு குறைந்த அளவே மேக்-அப் போட வேண்டும்.

எவ்வாறு மேக்-அப் போடுவது :

பள்ளி விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப் போட்டிகள் என்று எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் குழந்தைகளுக்கு மேக்-அப் போடுவதற்கு முன் அவர்களின் முகத்தை மிதமான கிளென்சர் பயன்படுத்தி சுத்தப்படுத்திய பின், மிதமான மாய்ச்சரைசர் லோஷன் தடவ வேண்டும்.

மேடை விழாக்கள் :

இந்த வகை மேக்-அப்கள், 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு உகந்தது.

* முதலில் முகத்தை சுத்தப்படுத்தி, ஆல்கஹால் இல்லாத டோனர், அதன் பின், ஆயில் ப்ரீ பவுண்டேஷன் பயன்படுத்த வேண்டும்.

* பின், ‘ஐ’ ஷேடோ அப்ளை செய்து விட்டு, அவர்களின் மேல் இமையில் ‘ஐ’ லைனர் வைத்து, சமமாக வரைய வேண்டும்.

* லிப் லைனர் வைத்து அவர்களின் உதட்டில் வரைந்துவிட்டு, அதனுள் லிப் கலரை நிரப்ப வேண்டும்.

* பின், நிறமற்ற பவுடரை பிரஷ் மூலம் தடவ வேண்டும்.

அலர்ஜியை தவிர்க்க :

தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் அதிகளவில் மேக்-அப் போடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு மேக்-அப் போடுவதால், அவை சருமத்தில் காணப்படும் துளைகளை அடைத்துக் கொண்டு பரு உண்டாக வழிவகுக்கிறது.

* எப்போதும் மேக்-அப்பை கலைக்கும் போது மிதமான கிளென்சர்களை பயன்படுத்த வேண்டும் அல்லது குழந்தைகளுக்கான டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்தலாம்.

* வாட்டர் புரூப் ‘ஐ’ மேக்-அப் ரிமூவரை பயன்படுத்தலாம். உதட்டில் காணப்படும் சாயத்தை நீக்க, சிறிதளவு வாஸ்லின் தடவி, பஞ்சு மூலம் அவற்றை துடைத்து சுத்தம் செய்யலாம்.

* புண்கள் ஏற்பட்டால், கத்தாழை ஜெல் தடவலாம்.

இவை அனைத்தையும் செய்தாலும், மேக்-அப் என்பது, சும்மா ஜாலிக்காக செய்வது தான் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைத்து, அவர்களின் திறமை, தன்னம்பிக்கை மற்றும் அடக்கம் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு மேக்-அப் இல்லாமலேயே ஜொலிக்க பெற்றோர்தான் உதவ வேண்டும்.

Leave a Reply