shadow

குறை தீர்க்கும் கோயில்கள் – அவளிவ நல்லூர் சாட்சிநாதர்

நாமஜபம், அர்ச்சனை, ஆரத்தி, அபிஷேகம், பூஜை புனஸ்காரம், பிரதட்சணம், யாத்திரை, உபவாசம், உற்சவம்… இப்படி பரமனைப் பக்தி செய்ய எண்ணற்ற வழிகள் உள்ளன. இவற்றில் எந்தச் செயலையுமே செய்யாமல், நிச்சிந்தையாய் அவனை மட்டும் நினைந்து உருகுவதும்கூட ஒரு வகை பக்திதான் அல்லவா?

அப்படி, சிவனாரை அன்றி வேறு எதையுமே நினையாத ஓர் எளிய அடியாருக்காக, சிவனே உமையவள் சகிதம் வந்து காட்சி தந்து, சாட்சி சொன்ன அதிசயம் நடந்த ஊர்தான் அவளிவ நல்லூர் (அவள் இவள் நல்லூர்).

ஊர் சிறியதுதான். ஆனால், தன்னகத்தே கொண்ட பல்வேறு சிறப்புகளால் பெரும்பேர் பெற்றுத் திகழ்கிறது. இறைவனே வந்து சாட்சி சொன்ன ஊர் என்பதால் இதை `சாட்சிநாதபுரம்’ என்றும், `பனையாத்தாள்’ என்ற சக்திமிகுந்த கிராம தேவதையின் கோயில் இருப்பதால், ‘பனை பழுத்த நல்லூர்’ என்றும்கூட வேறு இரு பெயர்கள் இவ்வூருக்கு இருக்கின்றன.

அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயிலின் ஓய்வு பெற்ற மேலாளர் வி.மகாலிங்கம், கோயிலின் தல வரலாற்றையும் பெயர்க்காரணத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.

‘‘பாடல்பெற்ற காவிரி தென்கரைத் திருத்தலங்களில் நூறாவது தலம் இது. சுமார் 2000 வருஷங்களுக்கு முந்தைய கோயில். சைவக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் வந்து வணங்கி, பாடிச் சிறப்பித்த தலம். இந்தத் தலத்துக்கு இன்னொரு பெருமை, ‘பஞ்ச ஆரண்ய தலங்கள்’ ஐந்தில் (பெட்டிச் செய்தி) இதுவும் ஒன்று.

அந்தக் காலத்தில் இந்த ஊரில் சிவத்தொண்டையே சுவாசமாக நினைத்து, சிவாலயத்தில் இறைத்தொண்டு செய்து வாழ்ந்து கொண்டிருந்தார் ஒரு சிவாச்சார்யர். அவருக்குச் சுசீலை, விசாலாட்சி என்று இரு மகள்கள்.

சோழநாட்டின் சிறப்புமிகுந்த பழையாறை நகரில், சோழ மன்னரின் அவையில் புலவராக இருந்த காசிபரின் மகன் விஷ்ணு சருமருக்கு, மூத்த மகள் சுசீலையை மணம்செய்து வைத்தார் சிவனடியார். திருமணம் முடிந்த சில மாதங்கள் கழித்து, காசி யாத்திரைக்குப் புறப்பட்ட விஷ்ணு சருமர், சுசீலையை அவருடைய பிறந்தகத்தில் விட்டுச்சென்றார். வருடங்கள் கழிந்தன. திடுமென சுசீலையை அம்மை நோய் தாக்கியதில், கண்கள் பாதிக்கப்பட்டுப் பார்வையை இழந்தாள். அத்துடன், அம்மைத் தழும்புகளால் அவளின் முகமும் பொலிவிழந்தது.

யாத்திரை முடிந்து திரும்பிய விஷ்ணு சருமர் மனைவியை அழைத்துச்செல்ல மாமியார் வீட்டுக்கு வந்தார். அங்கே, சுசீலையின் கோலம் கண்டு அதிர்ச்சியுற்றார்.

‘இது என் மனைவி சுசீலையே அல்ல!’ என்று அலறிய அவரிடம், நடந்த விஷயங்களை எடுத்துச் சொன்னபோதும் நம்பவில்லை.

இடைப்பட்டக் காலத்தில், அர்ச்சகரின் இளைய மகள் விசாலாட்சி பருவமடைந்து, நன்கு வளர்ந்து, அக்காவைப் போலவே அழகாக இருந்தாள். அவளைப் பார்த்த விஷ்ணு சருமர், ‘இவள்தான் என் மனைவி சுசீலை!’ என்று சொல்லி, அவளையே அழைத்துச் செல்வேன் எனப் பிடிவாதம் பிடித்தார். நடந்ததையெல்லாம் பார்த்து மனம்பேதலித்த சிவனடியார், கோயிலுக்குச் சென்று இறைவனடியில் வீழ்ந்து கதறினார்.

‘நினைவுதெரிந்த நாளிலிருந்து உன்னைத்தானே பூஜித்தேன்… உனக்குத்தானே ஊழியம் செய்தேன்… அதற்குப் பலன் இதுதானா இறைவா? என் மகளுக்கு இந்தக் கதியா? இதைப் பார்ப்பதைவிட, உன் கழல்களிலேயே நான் உயிரைவிடுகிறேன்!’ என்று கண்ணீர் விட்டு அழுது, தொழுதார்.

அப்போது சிவபெருமான் ஒரு முனிவர் உருவத்தில் தோன்றி, ‘நாளை காலை அனைவரும் சந்திர தீர்த்தத்தில் நீராடி வாருங்கள்’ என்று சொல்லி மறைந்தார். மறுநாள் அனைவரும் கோயிலுக்கு எதிரே உள்ள சந்திர தீர்த்தம் எனும் குளத்தில் நீராடி, இறைவனை வழிபட்டனர். என்ன அதிசயம்… தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த சுசீலையின் முகம், பழைய அழகோடு பளிச்சிட, கண் பார்வையும் திரும்பியிருந்தது. அப்போது அங்கே முனிவர் உருவில் தோன்றிய இறைவன், ‘அவளே இவள்!’ என்று கூறியருளினார். ‘நீ மணமுடித்த அந்தப் பெண்தான் இவள்’ என்று இறைவனே சாட்சி சொன்னதும், விஷ்ணு சருமர் தன் தவற்றை உணர்ந்து வருந்தினார்.

தனது அழுகுரலைக் கேட்டு ஓடிவந்து, மகளின் வாழ்வை மீட்டுத்தந்த பரமனின் பெருங்கருணையை நினைத்து, சிவனடியார் கண்ணீர் வடிக்க… ரிஷப வாகனத்தில் அம்மையப்பனாகக் காட்சி தந்து, அவரை இன்னும் பேருவகைக்கு உள்ளாக்கினார் சிவபெருமான். தன் பக்தனின் குறை தீர்க்க நேரே வந்து சாட்சி சொன்னபடியால், ‘சாட்சிநாதர்’ என்ற பெயரால் வழங்கப்பட்டார். இந்த ஐதீகத்தை விளக்கும்விதமாக, ரிஷப வாகனத்தில் அம்மையும் அப்பனும் அருள்பாலிக்கும் திருமூர்த்திகள் மூலவர் சந்நிதியில் சிவலிங்க மூர்த்தத்தின் பின்புறம் காணப்படுவது, வேறெங்கும் காண்பதற்கரிய சிறப்பு!’’ என்று பக்திபூர்வமாக விளக்கினார் மகாலிங்கம். அவரே தொடர்ந்து, ‘‘இந்தச் சம்பவம் நிகழ்ந்தது ஒரு தை அமாவாசை தினம் என்பதால், இப்போதும் தை அமாவாசை தினம் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. காலையில் புனித நீராடல், பஞ்சமூர்த்திகள் திரு உலா, தீர்த்தம் வழங்குதல் என விமரிசையாக இருக்கும். சிறிய ஊர் என்றாலும் கோயிலின் கீர்த்தி மிகவும் பெரியது. கேரளா மற்றும் கொங்கு மண்டலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். 2003-ம் ஆண்டில் நடந்த கும்பாபிஷேகத்துக்குப் பிறகு, இப்போதுதான் அடுத்த கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன’’ என்றார்.

கோயில் சிறியதுதான். நான்கு புறமும் உயர்ந்த கல் மதில் சுவர்கள், ராஜகோபுரத்துக்குப் பதிலாகத் தோரண வாயில் நம்மை வரவேற்கிறது. பலிபீடம், நந்திதேவரைக் கடந்துசென்றால், தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியில், அழகே உருவாக நம்மை ஆட்கொள்கிறாள் அருள்மிகு சௌந்தரநாயகி. அதையடுத்து, மூலவர் சந்நிதி. கர்ப்பகிரகத்தில் லிங்கத் திருமேனியின் பின்புறத்தில், இத்தலத்தில் அடியாருக்குக் காட்சி கொடுத்த இறைவனும் இறைவியும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய சிலாரூபம் அமைந்திருக்கிறது; விசேஷ தரிசனம்.

கோயிலின் உட்பிராகாரத்தில் விநாயகர், ஷண்முகர், மகாலட்சுமி ஆகிய தெய்வங்களும், கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை ஆகியோரும் அருள்புரிகின்றனர். இங்கே அகத்தியர் வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதற்கேற்ப, அகத்தியர் திருவுருவமும் கோஷ்டத்தில் காணப்படுகிறது. மேலும் சண்டிகேஸ்வரர், நடராஜர் – சிவகாமியம்மை, நவகிரகங்கள், நால்வர், பைரவர், சூரியன் என அனைத்து தெய்வங்களும் இங்கே அருள்பாலிக் கிறார்கள். சிவனடியாரின் மகள்களான சுசீலை, விசாலாட்சி ஆகிய இருவரின் சிலா உருவங்களையும் இங்கே காணமுடிகிறது.

ஒருகாலத்தில் பாதிரி வனமாக இருந்த இத் தலத்தின், இன்னொரு சிறப்பம்சம், இதன் தல விருட்சமான பாதிரி மரம். ‘‘பாதிரி என்பது ஒரு சிறந்த மூலிகையும்கூட. இம்மரம் பூக்கும், காய்க்கும். ஆனால், விதை இருக்காது என்பது இதன் சிறப்பம்சம். ஆண்டுக்கு இரு மாதங்கள் பூக்கும். இதன் பூவைத் தண்ணீரில் போட்டுவைத்து, அந்தத் தண்ணீரை அருந்தினால் சரும நோய்கள் தீரும். விஞ்ஞானரீதியாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்கள்’’ என்கிறார் மகாலிங்கம்.

சாட்சிநாதரை வழிபாடுகளோடு பிரார்த்தித்தால், சருமப் பிரச்னைகள், கண்களில் கோளாறுகள், பார்வைக் குறைபாடுகள் நீங்குவதாக நம்பிக்கை. முன்பெல்லாம் சந்திர புஷ்கரணியில் தண்ணீர் நிறைய இருந்ததால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதில் நீராடி, இறைவனுக்கு நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்வது வழக்கம். திருமண வாழ்க்கையில் பிரச்னை, மணவாழ்வில் மனத்தாங்கல் இருக்கும் தம்பதிகளும் அவளிவநல்லூர் வந்து ஸ்ரீசாட்சிநாதரை வணங்கினால், கருத்துவேற்றுமை மறைந்து, காலமெல்லாம் கருத்தொருமித்து, மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது பல பக்தர்களின் வாழ்வில் உணர்ந்த உண்மை.

எப்படிச் செல்வது?

கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம், ஆவூர் சென்றால் அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அவளிவநல்லூர். தஞ்சாவூர் – திருவாரூர் சாலையில் அம்மாபேட்டையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவு.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை. மாலை 4 முதல் 8 மணி வரை.

Leave a Reply