shadow

கருணாநிதிக்கு மெரினாவில் இடமில்லை: தமிழக அரசு

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய திமுகவினர் விருப்பம் தெரிவித்த நிலையில் தமிழக அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. கிண்டியில் உள்ள ராஜாஜி, காமராஜர் நினைவிடங்களுக்கு அருகே இடம் ஒதுக்க தயாராக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக முறையிட்டது. நேற்று இரவு 10.30 மணிக்கு இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் மனுவை விசாரித்தனர்.

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபாலன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் அரசுத் தரப்பில் ஆஜராகினர். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், வில்சன் ஆஜராகினர்.

சுமார் 2 மணி நேரம் நடந்த வழக்கு விசாரணையை அடுத்து, திமுகவின் மனு இன்று காலை 8 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி தங்களது பதிலை காலை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.

Leave a Reply