ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முறையில் மாற்றம்: மத்திய அரசுக்கு யுபிஎஸ்சி பரிந்துரை
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய பணியாளர், பயிற்சித் துறை அமைச்சகத்துக்கு மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக குடிமைப்பணித் தேர்வு முறை குறித்து ஆய்வு செய்ய முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பி.எஸ்.பாஸ்வான் தலைமையில் ஒரு குழுவை யுபிஎஸ்சி அமைத்தது. இக்குழு தனது பரிந்துரைகளை கடந்த மாதம் அளித்தது. அதில் குடிமைப்பணித் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அக்குழுவின் பரிந்துரைகளை இறுதி முடிவுக்காக மத்திய பணியாளர், பயிற்சித் துறை அமைச்சகத்துக்கு யுபிஎஸ்சி அனுப்பிவைத்துள்ளது. குடிமைப்பணித் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 32-ஆக உள்ளது. இதனைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை பாஸ்வான் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.
இப்போது, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என்ற வரிசையில் தேர்வு நடத்தப்பட்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 21 வயது முதல் 32 வயதுக்குள்பட்டவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி., எஸ்.டி., ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.