shadow

இனியாவது சேரன் திருந்த வேண்டும்: விஷால் எச்சரிக்கை அறிக்கை

சென்னை ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் பொறாமை காரணமாக திரையுலகில் உள்ள ஒருசிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் சங்க பதவியில், தயாரிப்பாளர் சங்க பதவியில் இருந்து கொண்டே அரசியலில் பலர் ஈடுபட்டிருக்கும் நிலையில் சேரன் போன்றோர் விஷாலை மட்டுமே குறிவைத்து விமர்சனம் செய்து வருகின்றனர். பல வருடங்களாக எந்த படத்தையும் தயாரிக்காத சேரன், தயாரிப்பாளர்களின் ஒட்டுமொத்த நன்மைக்காக போராடுவது போல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சேரனுக்கு எச்சரிக்கை விடுக்கும்வகையில் விஷால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இயக்குனர் சேரன் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றேன். ஆனால் சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகின்றன. என் மீது தவறு இருந்து அதை சுட்டிக்காட்டினால் திருத்தி கொள்வேன். ஆனால் சேரன் சொல்வது அடிப்படையிலேயே பொய்யான குற்றச்சாட்டு

ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவதாலேயே அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தை பழிவாங்கும் என்பது ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத்தான் பார்க்கிறேன். சேரனின் வாதம் இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் சங்க நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்துவது போல் இருக்கின்றது.

எப்போதுமே உரிமைகள் என்பவை கெஞ்சி கேட்டு பெற வேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பி பெற வேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படி தான் செயல்படுகின்றேன். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதும் மக்களின் சார்பில் அவர்களுக்காக குரல் எழுப்பத்தான்

என்னுடைய நண்பர்களையும் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன். எதுவாக இருந்தாலும் சட்டப்பட்டி சந்திக்க தயாராக இருக்கிறேன். அதை விடுத்து கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து மிரட்டி காரியம் சாதிக்கவோ, விளம்பரம் தேடவோ முயற்சிக்கும் எந்த ஒரு செயலையும் சங்கத்தில் அனுமதிக்க முடியாது. இனிமேலாவது சேரன் திருந்தி வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியமான மனோபாவத்துக்கு மாற வேண்டும்.

சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகளின்படி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு விஷால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply