இந்த புனித மண்ணில் வாழ கமல் உரிமையற்றவர்: இந்துமகா சபா
நடிகர் கமல்ஹாசன், கடந்த வாரம் வெளியான ஆனந்த விகடன் இதழில் இந்துத் தீவிரவாதம் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையைக்கிளம்பியது. மேலும், இந்து அமைப்புகள் கமல்ஹாசனுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர். கமலுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தநிலையில், நடிகர் கமலுக்கு எதிராக இந்து மகா சபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், ‘கமல்ஹாசன் மற்றும் அவரைப் போன்ற சிந்தனை கொண்டவர்கள் சுட்டுக் கொல்லவேண்டும் அல்லது தூக்கிலிடவேண்டும். மக்கள் நம்பும் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக யாரேனும் அவதூறு கருத்துகள் கூறினால், அவர்கள் இந்தப் புனித மண்ணில் வாழ்வதற்கு உரிமையற்றவர்கள். அவர்கள் குறிப்பிட்ட வார்த்தைக்கு அவர்கள் மரணமடையவேண்டும்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்து மகா சபையின் மீரட் பொறுப்பாளர் அபிஷேக் அகர்வால், ‘நம் கட்சியைச் சேர்ந்த அனைவரும் கமல்ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் நடித்த படத்தை புறக்கணிக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் இந்தியர்கள் அனைவரும் கமலின் படத்தை புறக்கணிக்கவேண்டும். இந்து மதத்தைப் பற்றிப் பேசிய யாரையும் மன்னிக்கமுடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.