shadow

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தடுப்புச்சுவரா? பாகிஸ்தான் புகாருக்கு இந்தியா பதில்
border
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இந்தியா சுற்றுச்சுவர் எழுப்பவுள்ளதாக பாகிஸ்தான் பரப்பி வரும் பொய்யான குற்றச்சாட்டை எல்லை பாதுகாப்புப் படை ஐ.ஜி, ராகேஷ் சர்மா நேற்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று அவர் கூறியுள்ளார். .

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 10 மீட்டர் உயரம் 135 அடி அகலத்தில் சுமார் 197 கி.மீட்டர் தொலைவுக்கு எல்லைச் சுவர் எழுப்ப இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இந்தியாவின் இந்த செய்கை மிகுந்த கவலையளிப்பதாகவும் ஐ.நா. சபையில் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு எதிராக இந்தியா செயல்பட்டு வருவதாகவும் ஜம்மு-காஷ்மீர் பிராந்தியம் சர்ச்சைக்குரிய பகுதி என்றும் அங்கு சுற்றுச்சுவர் எழுப்பக்கூடாது என்றும் கூறியுள்ளது. மேலும்அந்த இடத்தில் தற்போதைய தற்காலிக எல்லைக் கோட்டை நிரந்தரமாக்க சுற்றுச்சுவரை கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. இது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்துக்கு எதிரானது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை ஐ.ஜி. ராகேஷ் சர்மா கூறும்போது, “ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லையில் சுற்றுச்சுவர் எழுப்புவதாக பாகிஸ்தான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. மேலும், இது அடிப்படை ஆதாரமற்ற கதை.

தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவே பாகிஸ்தான் இத்தகைய கதைகளைக் கூறுகிறது. எல்லைப்பகுதியில் உள்ள தரை நிலவரத்தை பொருத்தவரை அங்கு சுற்றுச்சுவர் எழுப்புவது சாத்தியமில்லை.

மேலும், எல்லையில் சுற்றுச்சுவர் எழுப்புவதால் மட்டும் தீவிரவாத ஊடுருவல்களை முறியடிக்க முடியாது. ஊடுருவல் முயற்சிகளை முறியடிப்பது தொடர்பாக ஆலோசனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். எல்லையில் அமைக்கப்பட்ட வேலிகளை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply