shadow

ஆக்ரோஷமான ஆறு.. அமைதியான புத்தர்..

உலகிலேயே அதிக அளவில் சிலைகள் இருப்பது புத்தருக்குத்தான் என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. அதுவும் விதவிதமான நிலைகளில் புத்தர் சிலைகளை நாம் காண முடியும். நின்றபடி, அமர்ந்தபடி, தியானித்தபடி என்று அவரது உருவங்கள் பலவாறாக வடிக்கப்பட்டிருக்கின்றன. உலக அளவில் சீனா, ஜப்பான், தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் புத்தரின் சிலைகள் அதிகமாக நிறுவப்பட்டுள்ளன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல், சீனாவில் ஒரு புத்தர் சிலை இருக்கிறது. இரு மலையின் மத்தியில் குடைந்து உருவாக்கப்பட்டது.

உலகில் உள்ள புத்தர் சிலைகளில் மிகப்பெரியதில் இதுவும் ஒன்று. சீனாவின் தெற்குப் பகுதியான லெசான் நகரத்தின் பிரமாண்ட மலையை குடைந்து தான் இந்த பிரமாண்ட புத்தர் சிலையை வடித்திருக்கிறார்கள். இந்த சிலை 233 அடி உயரமும், 92 அடி அகலமும் கொண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

வியப்பை ஏற்படுத்தும் இந்த பிரமாண்ட சிலையின் பின்னால், அது உருவானதற்கான காரணமும் வியப்பை தருவதாக அமைந்திருப்பதுதான் விசேஷம்.

புத்தர் சிலை அமைந்திருக்கும் லெசான் மலைப் பகுதியைச் சுற்றி ‘மின்சியாங்’ என்ற ஆறு ஓடுகிறது. தற்போது அமைதியே உருவாக காணப்படும் இந்த ஆறு, கி.பி. 7-ம் நூற்றாண்டில் ஆக்ரோஷத்தின் உச்சமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதீத இரைச்சலுடன், அதிகபட்சமான இழுப்பு சக்தியுடன் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த இந்த ஆற்றைக் கடப்பதும், படகுகளில் பயணம் செய்து மறு கரையை அடைவது என்பதும் அசாத்தியமான விஷயமாகவும், சவாலாகவும் இருந்திருக்கிறது.

இதனால் லெசான் பகுதியில் வசித்து வந்த மக்கள், ‘ஹை டாங்’ என்ற புத்த துறவியிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். மக்களின் நிலைமையை உணர்ந்த அந்தத் துறவி, ஆற்றின் ஒரு கரையில் புத்தர் சிலை ஒன்றை அமைக்க சொல்லியிருக்கிறார். ‘ஆர்ப்பரிக்கும் மனதையே தியானத்தால் அடக்கும் புத்தர்.. ஆக்ரோஷமான ஆற்றையும் அடக்கிவிடுவார்’ என்று நம்பிய மக்களும், சிலை வடிப்பதற்காக பணியைத் தொடங்கினர். அவர்கள் சிலை வடிப்பதற்காக தேர்வு செய்தது ஆற்றை ஒட்டியுள்ள மலையை.

கி.பி.713-ல் தொடங்கிய இந்தப் பணி, மும்முரமாக நடைபெற்றது. புத்தரின் சிலை பாதி வடிக்கப்பட்ட நிலையில், சிலை அமைக்கும்படி ஊக்கம் அளித்து வந்த துறவியான ‘ஹை டாங்’ இறந்து போனார். அதனால் சிலை வடிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு, நாளடைவில் அந்தப் பணி நின்றே போனது. ஆனால் மின்சியாங் ஆற்றின் ஆக்ரோஷம் மட்டும் நிற்க வில்லை.

சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்னர், லெசான் நகரை பார்வையிடுவதற்காக வந்த அந்தப் பகுதியை ஆட்சி செய்த டாக் வம்ச ஆளுநர் சிலையைப் பற்றியும், அது பாதியில் நிற்பது பற்றியும் அறிந்தார். பின்னர் அவரது முழு முயற்சியின் பயனாக கி.பி.803-ல் புத்தர் சிலை முழு வடிவம் பெற்றது. இதில் ஆச்சரியம் மிக்க விஷயம் என்னவென்றால், சிலை முழுமைப் பெற்றதுமே.. ஆக்ரோஷமான மின்சியாங் ஆறு அமைதியின் மறு உருவாக மாறிவிட்டதாம்.

இந்த புத்தர் சிலையின் தலையில் 1,021 சுருள் முடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முழுவதும் மலையின் பாறையிலேயே அமைக்கப்பட்ட இந்த புத்தரின் காதுகள் மட்டும் மரத்தால் ஆனது. இப்படி காதுகளை மட்டும் மரத்தில் செய்து இணைப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லையாம். இதற்காக மட்டும் சுமார் 1,000 பேர் தனிப்பட்ட முறையில் பணியாற்றி இருக்கிறார்கள்.

இந்த புத்தர் சிலையை காண வரும் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மலையின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை புத்தரை ரசித்தபடியே செல்ல பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.

‘இது புத்தர் சிலை இல்லை.. புத்தர் மலை..’ என்ற சீன மக்களின் கருத்தை ஏற்றுக்கொண்ட யுனஸ்கோ நிறுவனம், இதை உலகின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது.

புத்தர் சிலையை வெயில், மழை போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட மரபந்தல்கள், டாங் வம்ச அரசர்களை எதிர்த்து நடந்த போர்களில் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் இந்த புத்தர்.. இன்னும் தன்னுடைய புன்னகை மாறாமல் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.

Leave a Reply