shadow

ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் ஆண்டாளுக்கு சமர்ப்பிக்க வஸ்திர மரியாதை ஊர்வலம்

ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடக்கும் சித்திரைத் தேரோட்டத்தின் போது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து மங்கலப் பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

அதே போல ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரத்தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின் போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை ஆண்டாளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி நேற்று மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்கள் மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வழங்கப்பட உள்ள வஸ்திரம் மற்றும் மங்கல பொருட்களை படத்தில் காணலாம்.

பின்னர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் பட்டுவஸ்திரங்களை யானை மீது அமர்ந்து எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மங்கலப் பொருட்களை கையில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க பட்டுவஸ்திரம், பழங்கள், மங்கலப்பொருட்கள் ஊர்வலமாக 4 உத்திரவீதிகளை வலம் வந்து கோவிலுக்கு வந்தனர்.

இன்று காலை 10 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கலப்பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்படும்.

இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை(27-ந் தேதி) நடைபெறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தில் தேரில் எழுந்தருளுவார்.

Leave a Reply