shadow
ராம்குமாரின் எப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?
firsss1சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், கடந்த ஞாயிறு அன்று திடீரென மர்மமான முறையில் புழல் சிறையில் மரணம் அடைந்தார். அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் தற்போது ராம்குமாரின் மரண வழக்கில் உள்ள எப்.ஐ.ஆரில் என்ன பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
“விசாரணை சிறைவாசி எண் 00400. ராம்குமார் மீது கொலை வழக்குப்பதிந்து (302) நுங்கம்பாக்கம் போலீஸரால் கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 4.7.2016 முதல் சிறைவாசியாக அனுமதிக்கப்பட்டு வந்தார். 
இவர், 18.9.16ல் மாலை 4.30 மணியளவில் டிஸ்பென்சரி பிளாக்கில் தண்ணீர் குடிக்க  சிறைக்காவலர் பேச்சிமுத்துவிடம் அறையை திறந்து விட சொன்னார். அறையினை திறந்து தண்ணீர் குடிக்க அவர் அனுமதி அளித்துள்ளார். 
அப்போது தண்ணீர் குடம் அருகே உள்ள எலக்ட்ரீக்கல் சுவிட்ச் பாக்ஸை கையால் ஓங்கி அடித்து அதில் உள்ள மின் வயர்களை பிடுங்கி தனது பல்லால் கடித்துள்ளார். அதைப்பார்த்த பேச்சிமுத்து லத்தியை பயன்படுத்தி ராம்குமாரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். 
மயங்கிய நிலையில் கீழே விழுந்த ராம்குமாரை காப்பாற்ற மெயின் சுவிட்ச் பாக்ஸை பேச்சிமுத்து அணைத்துள்ளார். பிறகு வாக்கிடாக்கி மூலம் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். சில நிமிடங்களிலேயே சிறை மருத்துவ அலுவலர் நவீன்குமரன், சம்பவ இடத்துக்கு வந்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். 
மேல் சிகிச்சைக்காக சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது உதவி சிறை அலுவலர் பிச்சாண்டி, சிறைகாவலர்கள் ராம்ராஜ், அருண்குமார், பேச்சிமுத்து, ஆண் செவிலி உதவியாளர் புருஷோத்தம்மன் ஆகியோர் சென்றனர். 
மாலை 5.45 மணிக்கு ராம்குமார் இறந்து விட்டதாக டாக்டர் உறுதியளித்தார். பிறகு ராம்குமாரின் இறப்பு விவரம் இரவு 7.35 மணிக்கு காவலர் கவிதா என்பவர் சிறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். 
பின்னர் ராம்குமாரின் அப்பா பரமசிவத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது” 
இவ்வாறு அந்த எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply