shadow

முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கைது

மலேசியா நாட்டில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமராக இருந்த நஜீப் ரசாக் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அமைத்த கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது மலேசியாவின் புதிய பிரதமர் ஆனார்.

புதிய பிரதமராக பதவியேற்ற மகாதீர் முகமது, முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டார்,. இதனையடுத்து நஜீப் ரசாக் வீடு மற்றும் அலுவலகங்களில் பணமோசடி தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் பெட்டி பெட்டியாக நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை 150 போலீசார் கணக்கீட்டு வந்த நிலையில், அதன் மொத்த மதிப்பு 27.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பின் படி 188 கோடி 71 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்) என அறிவிக்கப்பட்டது. அவற்றில் 12 ஆயிரம் நகைகள், 567 ஆடம்பர கைப்பைகள், 234 சன்கிளாசஸ் மற்றும் 423 விலையுயர்ந்த கைக்கடிகாரம் போன்றவை அடங்கும்.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளை நஜீப் ரசாக் தரப்பு மறுத்து வந்தாலும், அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலை இருந்து வந்த நிலையில், இன்று அவர் பணமோசடி தடுப்பு பிரிவு முகமையால் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நஜீப் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நாளை பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply