shadow

முதுநிலை மருத்துவப் படிப்பு: 423 இடங்கள் நிரம்பின

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் 423 இடங்கள் நிரம்பியுள்ளன.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் மே 19}ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 981 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் இதுவரை சமர்ப்பித்துள்ள 122 இடங்கள் என மொத்தம் 1,103 இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் நாள் கலந்தாய்வில் அரசு கல்லூரிகளில் 414 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 29 என மொத்தம் 443 இடங்கள் நிரம்பின. பொதுப்பிரிவினருக்கான 2}ஆம் நாள் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

போலீஸ் பாதுகாப்பு: முதல் நாள் கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களைப் பெற்றவர்கள், மாநில ஒதுக்கீட்டின் கீழ் தங்களுக்கு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று வாக்குவாதத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து திங்கள்கிழமை கலந்தாய்வு நடைபெற்ற மருத்துவமனை வளாகம், கலந்தாய்வு நடைபெற்ற அரங்கு என அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மருத்துவமனைக்குள் நுழைவோர் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரித்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

423 இடங்கள்: திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 1193 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.அவர்களில் 280 பேர் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களைப் பெற்றவர்கள் என்பதால் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியில்லை. 772 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 330 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 93 இடங்கள் என மொத்தம் 423 இடங்கள் நிரம்பின. 2}ஆம் நாள் கலந்தாய்வின் முடிவில் இடங்களைப் பெற்றவர்களில் 263 பேர் அரசு மருத்துவர்கள், 160 பேர் தனியார் மருத்துவர்கள்.

இன்றைய கலந்தாய்வு: பொதுப் பிரிவினருக்கு செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெறும் கலந்தாய்வுக்கு 1,262 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். தரவரிசை 2538 முதல் 3799 வரை, கட் ஆஃப் மதிப்பெண் 500.64 முதல் 412.10 வரை பெற்றவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.

தேதி மாற்றம்: முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே மே 23}ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மே 24}ஆம் தேதி (வியாழக்கிழமை) முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்

Leave a Reply