shadow

பெண்களின் மார்பக கட்டியை கரைக்கும் வல்லமை படைத்த கானா வாழை

கானா வாழை… Commelina benghalensis என்பது இதன் தாவரவியல் பெயராகும். இதற்கு, கானான் வாழை, கானான் கோழிக் கீரை, காணாம் வாழை ஆகிய வேறு பெயர்களும் உண்டு. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த கானா வாழை சைனா, தைவான், ஜமைக்கா, அமெரிக்கா, கலிபோர்னியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வழியாக இந்தியாவை வந்தடைந்தது. நீண்ட நெடிய பயணம் செய்திருக்கும் இந்த மூலிகை தமிழ்நாட்டில் தானாகச் செழித்து வளரும் ஒரு தாவரமாகும். குறிப்பாக ஈரம் நிறைந்த நிலங்களிலும் கடற்கரையை அடுத்துள்ள நிலங்களிலும் பூங்காக்களிலும் வளரக்கூடியது. களைச் செடியாக பார்க்கப்படும் இதன் இலைகள் முட்டை போன்ற வடிவத்தில் காணப்படும், பூக்கள் நீல நிறத்தில் இருக்கும்.

கானா வாழை

கானா வாழையை ஓர் அற்புத மூலிகை என்று சொன்னால் அது மிகையாகாது. அதன் பயன்பாடு அறிந்தவர்களைவிட அதை பயன்படுத்திப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் மகத்துவம் தெரியும். இதிலுள்ள வேதிப்பொருள்கள் நோய் உண்டாக்கும் கிருமிகளை ஒழித்துப் புண்களை ஆற்றும் சக்தி படைத்தது. இதைப் பழங்குடி மக்களும் அவற்றைச் செய்து பார்த்து பலனடைந்த தமிழர்களும் புரிந்து வைத்துள்ளனர். இதன் தண்டுகளில் மாவுச்சத்தும் மியூசிலேஜ் என்ற நீர்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. புரதச் சத்தின் கருவூலமாகவும் இது இருப்பதால் கால்நடைகளுக்குப் பிடித்த ஒரு தாவரமாகும். குறிப்பாக கன்றுக்குட்டிகள் விரும்பிச் சாப்பிடுவதால் இதை `கன்றுக் குட்டிப்புல்’ என்று அழைக்கின்றனர். இளங்கன்றுக் குட்டிகள் தாய்ப்பாலை மறக்கவும் அதிக அளவு பால் கொள்முதல் செய்வதற்காகவும் கன்றுக் குட்டிகளுக்கு இந்த செடியை உணவாகக் கொடுப்பார்கள்.

பெண்களின் மார்பகத்தில் உண்டாகும் கட்டிகள், எரிச்சல், வலி, வீக்கம், புண் ஏற்படும்போது கானா வாழையின் முழுச் செடியையும் அரைத்து பற்றுப் போடுவதன்மூலம் பலன் கிடைக்கும். குறிப்பாகக் கால்களில் நீர் தேங்கி வீக்கமும் வலியும் சேர்ந்து காணப்படும் வாத நோயைக் குணப்படுத்துவதில் இது கை கண்ட மருந்தாகத் திகழ்கிறது. மேல்நாட்டு மருத்துவர்கள் நீரை வற்றச் செய்யும் தன்மையும் உள் அழலை ஆற்றும் தன்மையும் கானா வாழைக்கு உண்டு என்கிறார்கள்.

தாம்பத்ய உறவின்போது உணர்ச்சியைத் தூண்டி உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியது இந்த கானா வாழை. ஒரு டம்ளர் தண்ணீரில் இதன் முழுச்செடியுடன் தூதுவளைப்பூ, முருங்கைப்பூ சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்துக் காய்ச்சி சூடான பால், பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம். இதை ஆண்கள் 40 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால் தாது பலம் உண்டாகி குழந்தைப்பேறுக்கு வழிவகுக்கும். கானா வாழைக் கீரையுடன் கொட்டைப்பாக்கு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தாம்பத்யம் சிறக்கும். இதன் சாற்றில் கசகசாவை ஊற வைத்து அரைத்து தேன் விட்டு குழைத்துச் சாப்பிட்டு வந்தாலும் தாம்பத்யம் பலப்படும்.

தூதுவளைப்பூ

கானா வாழை, முருங்கைப்பூ, துவரம்பருப்பு சேர்த்துக் கூட்டு வைத்து நெய் சேர்த்துச் சாதத்துடன் 21 நாள்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் ஏற்பட்டு தாம்பத்யம் சிறக்க உதவும். இதேபோல் கானா வாழைக் கீரை, தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் தலா 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி தினமும் காலை மாலை ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். மேலும் பொதுவாக கானா வாழை புத்துணர்வு தரும் ஓர் அற்புத மருத்துவ மூலிகையாகும்.

காய்ச்சலைப் போக்குவதில் இது ஓர் அற்புத மூலிகையாகச் செயல்படுகிறது. மேலும் ரத்தத்தைத் தூய்மைப்படுத்தி சிறந்த சிறுநீர்ப் பெருக்கியாகவும் செயல்படுகிறது. உடலில் தேங்கிக் கிடக்கும் உப்புச் சத்தை வெளியேற்றும்ஒரு துப்பரவுப் பணியாளனாக இது செயல்படுகிறது. சிறுநீரகப் பைகள், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், இரைப்பை போன்றவற்றுக்கும் பலம் தருவதுடன் அவற்றில் ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றுகளைப் போக்குவதுடன் நுரையீரல் மற்றும் சுவாசப் பாதையில் ஒட்டிக் கொண்டு பிரச்னை ஏற்படுத்தும் சளியை நீக்கி நல்ல உடல் ஆரோக்கியத்தை தரக்கூடியது.

முருங்கை பூமுருங்கை பூ

இலைகளை எடுத்துச் சாறு எடுத்தோ தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்தோ வாய் கொப்பளித்தால் வாயில் ஏற்படும் நோய்க்கிருமிகள் அகலும். மேலும் தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல், தொண்டை அழற்சி, குரல்வளை தொடர்பான தொல்லைகள் அகலும். ஒரு கைப்பிடி இலையுடன் பத்து மிளகு சேர்த்து பனைவெல்லம் அல்லது உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் கடுமையான காய்ச்சல் காணாமல் போவதுடன் வலி விலகும். சுமார் 20 மி.லி இலைச்சாற்றை குடிப்பது அல்லது கொதிக்க வைத்த நீரை குடிப்பதால் வயிற்றுப்புண்ணால் ஏற்படும் ரத்தக்கசிவு, ஆசனவாயில் ரத்தம் கசிவது கட்டுப்படுவதோடு சீக்கிரம் குணமாகும்.பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைச் சரி செய்ய உதவும்.

வெறும் இலையை மட்டும் அரைத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் குழைத்து படுக்கைப் புண்கள், நாள்பட்ட புண்களின்மீது பூசி வருவது, இலையைக் காய வைத்துப் பொடியாக்கி புண்களின்மீது தூவி வருவதன்மூலம் குணம் கிடைக்கும். இதன் இலையைக் கசக்கிச் சாறு பிழிந்து சிறிது மஞ்சள்தூள் சேர்த்து முகப்பருக்களின் மீது பூசி வந்தால் விரைவில் பருக்கள் உடைந்து காயம் ஆறும். மேலும் அடிக்கடி இதைச் சாப்பிட்டு வந்தால் புற்று நோய், நெறிக்கட்டி போன்றவற்றைத் தடுக்க முடியும்.

கானா வாழை இலையுடன் சம அளவு கீழாநெல்லிச் சமூலம் சேர்த்து மையாக அரைத்துப் புளிப்பில்லாத புதிய தயிருடன் கலந்து தினமும் மூன்றுவேளை சாப்பிட்டு வந்தால் பெண்களைப் பாடாய்ப்படுத்தும் வெள்ளைப்போக்கு விரைவில் குணமாகும். இதன் முழுச்செடியுடன் அசோக மரப்பட்டை, அறுகம்புல் சம அளவு சேர்த்து அரைத்து காலை, மதியம், மாலை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு (மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு) சரியாகும்.

 

Leave a Reply