shadow

பிள்ளை வரம் தருவார் லக்ஷ்மி நாராயணர்!

32குலதெய்வ வழிபாடு மிக உசத்தியானது. நம் குலம் காக்கும் குலதெய்வம், மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும் என்பார்கள். குலதெய்வ வழிபாட்டை விட்டுவிட்டு, வேறு வழிபாடுகள் செய்வதால் பயன் இல்லை என்கின்றன ஞான நூல்கள். நம் முன்னோர்களும் குலதெய்வ வழிபாட்டை போற்றிக் கொண்டாடியிருக்கிறார்கள்.

ஆனால், சில காலகட்டங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால், காலம்காலமாய் தாங்கள் வாழ்ந்த ஊரையும் வழிபட்டுவந்த குலதெய்வத்தையும் துறந்து வேறு இடங் களுக்கு மக்கள் இடம்பெயர்ந்த சம்பவங்களும் உண்டு. அப்படி ஒரு நிகழ்வு பொட்டிபுரம் என்ற கிராம மக்களுக்கும் நிகழ்ந்தது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே அமைந்திருக்கிறது பொட்டிபுரம் எனும் கிராமம். இங்கே அழகுற அமைந்திருக்கிறது அருள்மிகு லக்ஷ்மிநாராயணபெருமாள் திருக்கோயில். இந்தக் கோயில் இங்கே உருவாகக் காரணம் மாமன்னன் கிருஷ்ணதேவராயர்.

வெகுநாட்களாக கிருஷ்ணதேவ ராயருக்குக் குழந்தைப்பேறு வாய்க்கவில்லையாம். எனவே, அவர் அரண்மனை ராஜகுருவை அழைத்து, ஜோதிடம் கணிக்கச் சொன்னார். மன்னரின் ஜாதகத் தைக் கணித்த ஜோதிடர், ‘‘ஓர் அக்ரஹாரத்தை உருவாக்கி, அவர்கள் மூலம் இறைவனுக்கு ஏழுகால பூஜை செய்துவந்தால், குழந்தைப் பேறு வாய்க்கும்’’ என்று அறிவுறுத்தினார்.

அதன்படியே, பல வைணவ மற்றும் சைவ அந்தணக் குடும்பங் களை அழைத்து வந்து, ஓமலூர் அருகே இயற்கை அழகு சூழ்ந்த பொட்டிபுரம் எனும் இந்த கிராமத்தில் பெரிய அக்ரஹாரத்தை
உருவாக்கினார் மன்னர். அத்துடன், அந்தணர்களுக்கு நிலபுலன்களும் ஏராளமாக வழங்கினார். மேலும், வைணவர்கள் வழிபடுவதற்கு ஏதுவாக அருள்மிகு லக்ஷ்மி நாராயணர் ஆலயத்தையும், சைவர்களின் வழிபாட்டுக்காக அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலயத்தையும் எழுப்பினாராம்.

இரு தரப்பு அந்தணர்களும் முறையே இரண்டு ஆலயங்களிலும் வெகு அற்புதமாக வழிபாடுகளை நடத்தி வந்தார்கள். அத்துடன், பல மாணாக்கர்களுக்கு வேதமும் கற்றுக் கொடுத்தனர். இறையருளால் மன்னவருக்கும் குழந்தை பிறந்தது.

காலப்போக்கில் வேறுபல காரணங்களால் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அந்தணர்கள் தங்களுடைய வீடு, மற்றும் நிலபுலன்களை விற்றுவிட்டு வேறு இடங்களுக்குச் சென்றதால், கடந்த 100 ஆண்டுகளாக இங்குள்ள அக்ரஹாரத்தில் அந்தணர் குடும்பமே இல்லை எனும் நிலை ஏற்பட்டது. கோயிலும் சரிவர நிர்வகிக்கப்படாமல் பாழடைந்து போனது.

100 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இந்தக் கிராமத்தைச் சேர்ந்த, கோடி கன்னிகாதானம் தாத்தாச்சாரியார் வம்சாவழி யில், குப்பண்ண ஐயங்கார் குடும்பத்தில் வந்தவரான, சென்னையில் வசிக்கும் புஷ்பா சீனிவாசன், இந்தக் கோயிலின் நிலையறிந்து, பக்த அன்பர்களின் உதவியோடு அங்கே வழிபாட்டுக்கு வழி வகை செய்திருக்கிறார். ‘ஸ்ரீலஷ்மி நாராயண சேவா சபா’ என்ற அமைப்பு ஏற்படுத் தப்பட்டு, தினமும் ஒரு கால பூஜை நடைப் பெற்று வருகிறது.

புஷ்பா சீனிவாசனிடம் பேசினோம். ‘‘ரொம்பவும் வரப்பிரசாதி இந்த லக்ஷ்மிநாராயணர். பெரும்பாலும் வைணவக் கோயில்களில் ஸ்ரீலஷ்மி நரசிம்மன் காட்சி அளிப்பதைப் பார்த்திருப்போம். இங்கே ஸ்ரீலக்ஷ்மிதேவியை தன் இடப்பக்கத் தொடையில் அமர்த்தியவாறு ஸ்ரீலட்சுமி நாராயணராகக் காட்சி தருகிறார் பகவான். தாயார் பெருமாளின் திருமுகத்தைப் பார்த்தபடி அருள்புரிகிறார். இருவரின் பாதங்களும் செங்கமலத்தின் மீது இருக்கும். ரொம்ப அற்புதமான தரிசனம்! திருமணத் தடையால் வருந்துவோர், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து பெருமாளை சேவித்துச் சென்றால் போதும், விரைவில் நல்லபலன் கிடைக்கும்!

48 நாட்களில் நினைத்தது நடக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்’’ என்று உள்ளம் சிலிர்க்க விவரிக்கிறார் புஷ்பா சீனிவாசன்.

அவரே தொடர்ந்து, ‘‘இந்தக் கிராமத்தில் பல குடும்பத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். இன்றைக்கு பல இடங்களில் வசிக்கும் அவர்களில் பலருக்கு, தங்களின் பூர்வீகம் குறித்து தெரியாமல் இருக்கலாம். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பெருமாள் அருளால் அனைவரும் ஒன்றிணைவார்கள் என நம்புகிறேன். மேலும், பெருமாளை சேவிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக, 25 லட்சம் மதிப்பீட்டில் தங்கும் விடுதி ஒன்றும் கட்டியிருக்கிறோம். கோயில் மீண்டும் உன்னத நிலையை அடையவேண்டும், பக்தர்கள் தினம் தினம் திரளாக வந்திருந்து பெருமாளின் அனுக்கிரஹத்தைப் பரிபூரண மாகப் பெற்றுச் செல்லவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’’ என்றார்.

சேலம் – பெங்களூரு நெடுஞ்சாலையில், சேலத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில், காமலாபுரம் விமான நிலையத்துக்குக் கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பொட்டி புரம். சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, தின்னப்பட்டிக்குச் செல்லும் பேருந்தில் ஏறினால், பொட்டி புரம் பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொள்ளலாம். அருகிலேயே அமைந்திருக்கிறது, ஸ்ரீலஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயில்.

மாதம்தோறும் விசேஷ வைபவங்கள் நிகழும் இந்த ஆலயத்தில், புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை, ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை வைபவங்கள் நடைபெறும். இந்த புண்ணிய தினத்தில் நாமும் கலந்துகொண்டு, பெருமாளின் திருவருளைப் பெற்று வருவோம்.

Leave a Reply