shadow

பதினாறு பேறுகளும் அருளும் பதினாறு கணபதிகள்!

3விநாயகப் பெருமானுடைய திருவடிவம் பக்தர்களின் மனப்பக்குவத்துக்கு ஏற்ப முப்பத்திரண்டு வகைகளாகப் போற்றப்படுகின்றன.

அவற்றுள் பதினாறு வடிவங்கள், விநாயகரின் ஷோடச வடிவங்கள் என்று போற்றப்படுகின்றன.

இந்த பதினாறு திருவடிவங்களையும் மனதில் தியானித்து, ஒவ்வொரு வடிவத்தின் பெயரையும் ஜபித்து ஆனைமுகனை தினமும் ஆராதித்து வந்தால், அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

ஓம் பக்தி கணபதியே போற்றி!

முழு நிலா போன்ற வெண்ணிற மேனியர். தம்முடைய நான்கு திருக் கரங்களில் தேங்காய், மாம்பழம், வாழைப் பழம், அமிர்த கலசம் (பாயச பாத்திரம் என்றும் சொல்வர்) வைத்திருப்பார்.
இவரை வழிபட்டால், வீட்டில் அன்னம் செழிக்கும்.

ஓம் த்விஜ கணபதியே போற்றி!

நான்கு முகங்களை உடையவர். சந்திரன் போன்று பிரகாசிப்பவர். நான்கு திருக் கரங்களிலும் முறையே சுவடி, அட்ச மாலை, தண்டம், கமண்டலம் ஆகியவற்றை ஏந்தியவர். கைகளில் மின்னல் கொடிபோன்ற வளையல்களை உடைய இவரை வழிபட்டால், தீவினைகள் நீங்கும்.

ஓம் திரயட்சர கணபதியே போற்றி!

இவர் பொன்னிற மேனி உடையவர். அசைகின்ற செவிகளை உடையவர். நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி இருப்பவர். தும்பிக்கையில் மோதகம் திகழும். இந்தத் திருவுருவை தியானித்து வழிபட, கலைஞானம் ஸித்திக்கும்.

ஓம் ஊர்த்துவ கணபதியே போற்றி!

பொன்னிறம் வாய்ந்தவர்.கரங்களில் நீல மலர், நெற்பயிர், தாமரை, கரும்பு, வில், பாணம், தந்தம் ஆகியவற்றை ஏந்தி இருப்பவர். பச்சை நிறத் திருமேனி உடைய தேவியைத் தழுவியவாறு காட்சி தரும் இவரை வழிபட்டால், இல்லறம் நல்லறமாகும்.

ஓம் ஏகதந்த கணபதியே போற்றி!

நீலநிறத் திருமேனியும் பேழை வயிறும் கொண்டவர். கோடரி, அட்சமாலை, லட்டு, தந்தம் ஆகியவற்றை தம்முடைய திருக்கரங்களில் ஏந்தி இருப்பார். இவரின் திருவுருவை தியானித்து வழிபட்டு வந்தால், முற்பிறவியிலும் இந்தப் பிறவியிலும் செய்த பாவங்கள் விலகும்.

ஓம் ஏகாட்சர கணபதியே போற்றி!

செந்நிறத் திருமேனி உடையவர். செந்நிறப் பட்டு அணிந்தவர். குறுகிய கால்களும் குறுகிய கைகளும் உடையவர். அபய வரத ஹஸ்தங் களுடன் மேலிரு திருக் கரங்களில் பாசமும் அங்குசமும், தும்பிக்கையில் மாதுளம்பழமும் கொண்டு திருக்காட்சி தருபவர். இவரை வழிபட்டால், தோஷங்கள் நீங்கும்.

ஓம் ஹரித்ரா கணபதியே போற்றி!

மஞ்சள் நிறத் திருமேனி உடையவர். திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை ஏந்தி இருப்பவர். பக்தர்களுக்கு உடனுக்குடன் அபயம் அளிப்பவர். இவரை வழிபட்டால், நம்மைச் சூழும் பேராபத்துகளும் சூரியனைக் கண்ட பனி போன்று விலகும்.

ஓம் ஹேரம்ப கணபதியே போற்றி!

ஐந்து திருமுகங்கள் கொண்டவர். இரண்டு கரங்களில் அபய- வரத ஹஸ்தமும், மற்ற திருக் கரங்களில் பாசம், தந்தம், அட்சமாலை, மலர்க் கொத்து, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி இருப்பார். இவரின் திருவுருவை தியானித்து வழிபட்டால், சத்ரு பயம் நீங்கும்.

ஓம் லட்சுமி கணபதியே போற்றி!

பாற்கடல் போன்ற வெண்மை நிற மேனி உடையவர். தமது எட்டு திருக்கரங்களிலும் கிளி, மாதுளை, கலசம், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, கட்கம் ஏந்தியும், வரத ஹஸ்தம் காட்டியும் திகழ்வார். மடியில் தேவியரை அமர்த்தியபடி அருளும் இவரை வழிபட்டால், வறுமைகள் நீங்கும்.

ஓம் மகா கணபதியே போற்றி!

முக்கண்ணனாக பிறை சூடி திகழ்பவர். கரங்களில் மாதுளை, கதை, கரும்பு, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பல புஷ்பம், நெற்கதிர், தந்தம், ரத்னக் கலசம் ஆகியவற்றுடனும், மடியில் அமர்ந்திருக்கும் தேவியை அணைத்த நிலையிலும் திகழும் இவரை வழிபட, மனச் சலனங்கள் விலகும்.

ஓம் நிருத்த கணபதியே போற்றி!

இவரை கூத்தாடும் பிள்ளையார் என்றும் அழைப்பர். கற்பக விருட்சத்தின் அடியில் எழுந்தருளி இருப்பவர். திருக்கரங்களில் பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் போன்றவற்றை ஏந்தி இருப்பவர். பொன்னிறத் திருமேனியரான இவரை வழிபட, தீயவை நீங்கி நல்லவை நாடிவரும்.

ஓம் க்ஷிப்ர பிரசாத கணபதியே போற்றீ

பேழை வயிறு உடையவர். ஆபரணங்கள் தரித்த திருமேனி கொண்டவர். பாசம், அங்குசம், கல்பலதை, மாதுளை, தாமரை, தர்ப்பை ஆகியவற்றை ஏந்தி இருப்பவர். இவருடைய திருவுருவைத் தியானித்து வழிபட்டால், வாழ்க்கையில் தடைகள் நீங்கும்; நற்காரியங்கள் நடந்தேறும்.

ஓம் சிருஷ்டி கணபதியே போற்றி!

சிவந்த திருமேனியர். பெருச்சாளி வாகனத்தை கொண்டவர். தம்முடைய திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை ஏந்தியிருப்பார். இவருடைய திருவுருவை மனதில் தியானித்து, அனுதினமும் வழிபட்டு வந்தால், கலை படைப்புகளில் வெற்றி பெறலாம்.

ஓம் விஜய கணபதியே போற்றி!

செந்நிற மேனி கொண்டவர். பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் இவர், தம் திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை ஏந்தியிப்பவர். இந்தப் பிள்ளையாரின் திருவுருவை தியானித்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் யாவற்றிலும் வெற்றி கிடைக்கும்.

ஓம் தருண கணபதியே போற்றி!

சிவந்த நிறமும், எட்டு திருக்கரங்களும் கொண்டவர். திருக்கரங்களில் பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தந்தம், நெற்கதிர், கரும்புத் துண்டு ஆகியவற்றை ஏந்தி இருப்பவர். இவருடைய திருவுருவை தியானித்து வழிபட்டால், நம் சந்ததி செழிப்புற்று திகழும்.

ஓம் உச்சிஷ்ட கணபதியே போற்றி !

நீலநிறத் திருமேனியராக, இரண்டு கரங்களில் நீலோற்பல மலரும், மற்ற கரங்களில் மாதுளம் பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை ஆகியவற்றை ஏந்தி இருப்பவர். இவருடைய திருவுருவை தியானித்து வழிபட்டு வந்தால், மனவாட்டங்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.

Leave a Reply