நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது: எச்.ராஜா
சமீபத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து இதுகுறித்து விசாரணை செய்து, எச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என எச்.ராஜா தரப்பு இன்று தலைமை நீதிபதியிடம் முறையிட்டது.
தலைமை நீதிபதி அமர்வுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்றும், எச்.ராஜாவை ஆஜராக உத்தரவிடுவதற்கு நீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான அமர்வுக்கு அதிகாரம் இல்லை எனவும் எச் ராஜா தரப்பு வக்கீல் முறையிட்டார்.
அவர்களின் கோரிக்கையை கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி தகில் ரமானி, உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் இதுபற்றி ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி செல்வம் அமர்வு பிறப்பித்த உத்தரவு மற்றும் தங்கள் தரப்பு கருத்துக்களை எச்.ராஜாவின் வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.