நாகதோஷம், புத்திரதோஷம், திருமண தடை நீக்கும் வீரமாகாளி அம்மன்
அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் திருமணத்தடை உள்ளவர்களும், அனைத்துவித திருமண தோஷம் உள்ளவர்களுக்கும், தலை சிறந்த தலமாக, திகழ்கிறாள்.
நாகதோஷம், புத்திரதோஷம், திருமண தடை நீக்கும் வீரமாகாளி அம்மன்
பூமிக்குள் இருந்து வெளிப்பட்ட அம்மன், திருமண வேண்டுதலுக்குப் பொட்டு தாலி காணிக்கை பெறும் ஆலயம், அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல் தெய்வம், முப்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம்.
இந்த அம்மன் திருமணத்தடை உள்ளவர்களும், அனைத்துவித திருமண தோஷம் உள்ளவர்களுக்கும், தலை சிறந்த தலமாக, வீரமாகாளி திகழ்கிறாள்.
வரம் வேண்டுவோர் அம்மனை நேரில் வந்து அல்லது ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்ள வேண்டும். விரைவில் திருமணம் கைகூடும். திருமண நிச்சயமான பிறகு அல்லது திருமணம் முடிந்தபிறகு, பொட்டு கட்டிய தங்கத்தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
இதேபோல, நாகதோஷம் உள்ளவர்களுக்கும், புத்திரதோஷம் உள்ளவர்களுக்கும், அன்னை வழிகாட்டுகின்றாள். நேர்த்திக் கடன் செலுத்திய குழந்தை மண் பொம்மைகள் இங்கே குவிந்துள்ளதே இதற்கு சாட்சியாக அமைகிறது. குழந்தை வரம் நிறைவேறியவர்கள் தத்துக் கொடுத்து, மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர்.
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயத்தைத் தரிசனம் செய்யலாம்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி நகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 33 கி.மீ., திருச்சிராப்பள்ளியில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே அரை கி.மீ. தொலைவிலும், இவ்வாலயம் அமைந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.