தோனியின் ஆட்டம் முடிவுக்கு வரலாம்: ரவிசாஸ்திரி

தோனியின் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளது தோனியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது

உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு பின் தோனி எந்தவொரு தொடரிலும் அணியில் சேர்க்கப்படவில்லை. தோனி மீண்டும் இந்திய அணிக்காக எப்போது விளையாடுவார்? என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு கொண்டிருந்தாலும் இந்திய அணி நிர்வாகம் இதுவரை இதற்கு பதில் அளிக்கவில்லை

இந்த நிலையில், தோனி விரைவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திக் கொள்வார் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது இதுகுறித்து, பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: தோனி தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தை முடித்துக் கொண்டிருக்கிறார். அவர் விரைவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதையும் நிறுத்திக் கொள்வார். ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை அவர் நிறுத்த அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

நீண்ட காலமாக அனைத்து விதமான போட்டிகளிலும் அவர் விளையாடி வந்துள்ளதால், அவருக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். இந்த வயதில் அவருக்கு டி20 கிரிக்கெட் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது. அவர் திரும்பவும் விளையாட வேண்டும். ஏனெனில் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகிறார். அதில் அவர் உடற்தகுதி எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக விளையாடும் பட்சத்தில், இருபது ஓவர் உலகக் கோப்பையில் அவர் பங்கேற்க இன்னும் வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் தானாகவே அவர் அணிக்குள் வந்துவிடுவார் என்று கூறியுள்ளார்”

Leave a Reply