shadow

தாய்ப்பால் புகட்டும் போது குழந்தைடன் பேச வேண்டும்

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதால், அம்மாக்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள்… எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜுரம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை வராது என்கிற விஷயங்கள் பலரும் அறிந்தவையே. அவற்றைக் கடந்து தாய்ப்பால் குறித்து பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் சீம்பால் முக்கியத்துவம் நிறைந்தது. பிரசவத்துக்குப் பின், இது சில நாட்களே வரும். குழந்தையை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும் இப்பாலில், கார்போஹைட்ரேட்டும் புரோட்டீனும் ஏராளமாக உள்ளன. இயற்கையான நோய்த்தடுப்பு சத்தாக திகழும் இப்பால், எளிதில் செரிக்கக் கூடியது. குழந்தைகள் சிரமம் இன்றி மலம் கழிக்கவும் உதவுகிறது. சீம்பால் குழந்தையின் இரைப்பை குடல் பாதையைச் சீராக்குகிறது. வயிற்றைப் பாதிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் உள்ளே செல்லாமல் தடுக்கிறது. குறிப்பாக, வெள்ளை ரத்த அணுக்களைக் (Leukocytes) காப்பதில் சீம்பால் சிறந்து விளங்குகிறது.

குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்குத் தரப்படும் தாய்ப்பால் சுகாதாரம் நிறைந்ததாக இருக்கும். குழந்தை குடிப்பதற்கு ஏற்ற தன்மையில் இருக்கும். இதனால் குழந்தைக்கு தண்ணீர், சர்க்கரை நீர், பழச்சாறு மற்றும் செயற்கை உணவுப்பண்டங்கள் கொடுக்கத் தேவையே இல்லை. பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கோ அது குறைவு. குழந்தைகள் வளர்ந்து வரும் நிலையில், 15 வயதுக்கு உட்பட்ட நிலையில் வரும் புற்றுநோயையும் தாய்ப்பால் கட்டுப்படுத்துகிறது. பவுடர் பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு 8 மடங்கு அதிகம். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளைவிட, ரத்த அழுத்தம் அதிகமாகவும் வாய்ப்புகள் அதிகம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பிரசவத்துக்குப் பின் அதிகரிக்கும் எடை குறையும். பால் தரும் தருணங்களில் தாயின் உடலில் வெளிப்படும் Oxcytocin என்ற ஹார்மோன் கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலையை அடைய உதவுகிறது. எலும்பு தேய்வது கட்டுப்படுத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 24 சதவிகிதம் குறைவு.

தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டியிருக்காது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் குண்டாக இருக்க மாட்டார்கள். ஆஸ்துமா, வீசிங், சரும நோய்கள் தாக்குவதும் குறைவு. நிற்பது, நடப்பது, பேசுவது போன்ற செயல்கள் எந்த தடையும் இல்லாமல் சரியாக நடைபெறும். நுண்ணறிவு அளவு அதிகமாக இருக்கும்.

2 மணி நேரத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்குப் பால் புகட்டலாம். ஒவ்வொரு தடவையும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பால் தரலாம். பால் குடித்த பின்னர், அரை மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை மீண்டும் கேட்டாலும் கொடுக்கலாம். இது போல ஒரு நாளில் பல தடவை குழந்தை கேட்கும் போதெல்லாம் தரலாம். பால் புகட்டும் போது குழந்தை உடன் பேச வேண்டும். இந்தப் பழக்கம் தாய்க்கும் சேய்க்குமான பிணைப்பைப் பலப்படுத்தும். பயண நேரங்களில் சிரமம் இல்லாமல், பால் கொடுப்பதற்கு வசதியாக ஃபீடிங் ஏப்ரன், சால்வை, பிரத்யேக உடைகள் விற்கப்படுகின்றன.

தாய்மார்களுக்குக் காய்ச்சல் இருக்கும்போதும் பால் புகட்டலாம். சின்னம்மையால் பாதிக்கப்பட்ட தாய் நேரடியாக பாலைக் கொடுக்காமல், தனியாக எடுத்துப் புகட்டலாம். தனியாக எடுக்கப்படும் பாலை குளிர்சாதனப் பெட்டியில் ஒருநாள் முழுவதும் வைக்கலாம். அறை வெப்ப நிலையில் 6 முதல் 8 மணி நேரம் வரை வைத்திருக்கலாம். எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட பெண்களும், தகுந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு குழந்தைகளுக்குப் பால் தரலாம்.

பால் கொடுக்கும் காலகட்டத்தில், தாயின் உடலில் இருந்து அதிக அளவு நீர்த்தன்மை குறையும். அதை ஈடுகட்ட, குழந்தைக்குப் பால் கொடுக்கும்போதெல்லாம் ஜூஸ், பால், மில்க்‌ஷேக் முதலான திரவ உணவுகளை தாய் அருந்துவது நல்லது. 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே உணவாக தரப்பட வேண்டும். ஏழாவது மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் அரிசிக்கஞ்சி கொடுக்க வேண்டும்.

சில குழந்தைகளுக்குத் தாய்ப்பாலில் உள்ள புரோட்டீன் ஒத்துக்கொள்ளாது. இதனால் வாந்தி வரும். அப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஒரு வயது வரை குழந்தைகளுக்குக் கண்டிப்பாக உப்பு, சர்க்கரை கொடுக்கக் கூடாது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைத் தரலாம். சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு 3 வயதுவரை பால் கொடுப்பார்கள் ஒரு கட்டத்தில் குழந்தையே பால் குடிப்பதை நிறுத்திவிடும். அப்படி நிறுத்தாத பட்சத்தில், குழந்தையின் கவனத்தை மாற்ற வேண்டும். பால் அருந்துவதை நினைவுப்படுத்தும் அறை, உடை, நாற்காலி போன்றவை குழந்தையின் பார்வையில் படாமல் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்லலாம். இதன் காரணமாக பால் குடிக்கும் எண்ணம் குறையும்.’’

Leave a Reply