தமிழ் தலைவாஸ் அணி மிகச்சிறப்பாக செயல்படும்: பயிற்சியாளர் பேட்டி
இந்த ஆண்டு நடைபெறும் புரோ கபடி லீக் போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக செயல்படும்’ என்று அந்த அணியின் பயிற்சியாளர் கே.பாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்தார். ஆறாவது ஆண்டாக அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள புரோ கபடி போட்டியின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் கே.பாஸ்கரன் கூறியபோது ‘தமிழ் தலைவாஸ் அணியில் சீனியர் மற்றும் இளம் வீரர்கள் போதுமான அளவில் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய அணியில் 5 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடங்களில் தான் போட்டியில் சறுக்கியது. அஜய் தாகூர் ஆட்டம் இழந்தால், அதன் பிறகு அணியை வழிநடத்த அனுபவம் மிக்க வீரர்கள் இல்லாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. ஆனால் இந்த முறை அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். இதனால் இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி மிகச்சிறப்பாக செயல்படும்’ என்று தெரிவித்தார்.
தமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாகூர் (கேப்டன்), அனில் குமார், அமித் ஹூடா, மன்ஜீத் ஷில்லார், ஜஸ்பிர்சிங், சுகேஷ் ஹெக்டே, சுர்ஜீத் சிங், சுனில், அருண், தர்ஷன், கோபு, அதுல், பிரதாப், ஜெயசீலன், அபிநந்தன் சண்டேல், ஆனந்த், விமல் ராஜ், ஜா மின் லீ, சான் சிக் பார்க் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.