shadow

சுவரை அலங்கரிக்க புதிய ஆலோசனைகள்


ட்டைக் கலை நயத்துடன் வைத்துக்கொள்வது என்பது ஒரு திறமை என்றே கூறலாம். பொதுவாக, வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்றால் அலங்காரப் பொருட்களை விலைக்கு வாங்கி வைப்பது வழக்கம். செலவு இல்லாமல் வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. கலை நயத்துடனும் நமக்குப் பிடித்த வகையிலும் சில அலங்காரங்களை வீட்டில் செய்ய வேண்டும் என்றால் டிஐஒய் (Do It Yourself) முறைகள் உதவும். குறைந்த நேரத்தில் உருவாக்கக்கூடிய சுவர் அலங்காரம் சிலவற்றைப் பார்க்கலாம்.

மரக் குச்சி சுவர் அலங்காரம்

பெரு நகரங்களில் வாழ்ந்தாலும் நம் கிராமங்களில் வாழ்வது போல இருக்க வேண்டும் என்று நினைத்தால் நாமே அதை உருவாக்க முடியும். மரம், பழுப்பு நிறம் போன்றவற்றை உபயோகித்தால் ஒரு பழமையான சூழல் கிடைக்கும். அந்த வகையில் நமக்கு எளிதில் கிடைக்கும் பொருள் குச்சிகள். அவற்றின் மூலம் சுவரில் நமக்குப் பிடித்த வடிவங்களாக உருவாக்கிக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: குச்சிகள், கம்

வெவ்வேறு அளவுகளில் குச்சிகளைச் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். சிறிய அளவில் இருந்து பெரிய குச்சிவரை ஒவ்வொன்றையும் ஒட்டிக்கொள்ள வேண்டும். பிறகு பெரிய அளவில் இருந்து சிறிய குச்சிகள் வரை வரிசையாக ஒட்டிக்கொள்ள வேண்டும். தற்போது இரண்டையும் இணைத்தால் படத்தில் காட்டியுள்ளபடியான வடிவத்தை உருவாக்க முடியும். குறிப்பு: சுவரில் ஒட்டுவதற்கு முன்பு நாம் உருவாக்கிய வடிவத்தில் பின்புறத்தில் ஒரு குச்சியைக் கிடைமட்டமாக ஒட்ட வேண்டும்.

ஆணிச் சரம் சுவர் அலங்காரம்

பொதுவாக வீட்டில் ஆணி அடிக்க வேண்டும் என்றாலே அனைவர் மனதிலும் தயக்கம்தான் ஏற்படும். ஆனால், ஆணி அடிப்பதிலும் ஒரு கலை இருக்கிறது என்றால் அதைத் தவிர்க்க வேண்டிய தேவையே இல்லை. அந்த வகையில், ஆணியின் மூலம் உருவாக்க கூடிய டிஐஒய் சுவர் அலங்காரம் இதோ

தேவையான பொருட்கள்: ஆணி, கலர் நூல்கண்டு

ஆணிகளை உங்களுக்குத் தேவையான உருவத்தில் அடித்துக்கொள்ள வேண்டும். அதாவது, எழுத்துக்கள் வேண்டுமென்றால் அதன் வடிவத்தில் அடிக்க வேண்டும். முதலில் பென்சிலில் வரைந்துகொண்டு அடிப்பது நல்லது. பிறகு அனைத்து ஆணிகளையும் நூலால் கோத்தால் , நீங்கள் விருப்பப்பட்ட வடிவம் கிடைக்கும். அதன்பிறகு, இரண்டு ஆணிகளாக, குறுக்கே நூலை கட்ட வேண்டும். ஆணிகளை வைத்து நூல் பின்னல் போட்டது போன்ற அழகான தோற்றம் இதில் கிடைக்கும். இதை வீட்டின் படிக்கும் அறையில் செய்தால் அழகாக இருக்கும்.

டாட்ஸ் சுவர் அலங்காரம்

சுவர் அலங்காரம் என்றால், அய்யய்யோ! அதெல்லாம் நாம எப்படிச் செய்வது, அதற்கெல்லாம் கலை நயம் வேண்டும் என யோசிப்பவர்கள்கூடச் சுவர் அலங்காரம் செய்யும் வகையில் எளிமையான ஒரு சுவர் அலங்காரம் தான் டாட்ஸ். தேவையில்லாத கலர் பேப்பர்கள், கிப்ட் ராப்பர்களை வைத்திருந்தால் போதும் இதனை உருவாக்கிவிடலாம். பேப்பர்களை வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதை எளிதில் செய்ய பஞ்சிங் இயந்திரம் தேவை. ஒரே அளவிலும் வெவ்வேறு அளவிலுமான வட்டங்கள் வரைந்து அதை வெட்டி வைத்து கொள்ளுங்கள். பின்பு, கேன்வாஸ் ஒன்றில் வரிசையாக கலர் பேப்பர்களை ஒட்ட வேண்டும் . பின்பு கேன்வாஸை ப்ரேம் செய்து மாட்டினால் வேலை முடிந்தது.

தேவையான பொருட்கள்: கலர் பேப்பர், கேன்வால், கம்

பேப்பர்களை ஒட்டும்போது நேர் கோட்டில் ஒட்ட வேண்டும். இங்கு உங்களுடைய கலை நயத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு விதமாக ஒட்டி , புதுப்புது உருவங்களை உருவாக்கலாம்.

ரிப்பன் சுவர் அலங்காரம்

ரிப்பன் உபயோகிப்பது இந்தக் காலத்தில் குறைந்து வந்தாலும், அலங்காரம் என்று வந்துவிட்டால் ஏதோ ஒரு இடத்தில் ரிப்பன் தேவைப்படத்தான் செய்கிறது. சாட்டின் ரிப்பன் , பிரிண்டட் ரிப்பன் என்று பல வகை இதில் வந்துவிட்டது. கிப்ட் வந்தால் அதில் பூ போன்ற பல வடிவங்களில் ரிப்பன் இருப்பதைக் காணலாம். அதை உபயோகித்து எளிய முறையில் வீட்டில் சுவர் அலங்காரம் உருவாக்கலாம்.

தேவையான பொருட்கள்: சார்ட் பேப்பர், ரிப்பன், கம்

குறிப்பு: இதுபோன்ற டிஐஒய் சுவர் அலங்காரம் உருவாக்குவதைவிட , வீட்டில் சரியான இடத்தில் வைப்பது அதற்கான அழகைக் கொடுக்கும்.

Leave a Reply