shadow

சர்க்கரை நோய்: வருமுன் தடுக்கும் வழி

உலகின் சர்க்கரை நோய் தலைநகராக மாறிவருகிறது இந்தியா என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ‘சர்க்கரை நோய்’ வளையத்துக்குள் வந்துகொண்டிருப்பது அபாய மணி.

கணையத்தில் இருந்து இன்சுலின் சுரப்பதில் மந்தநிலை அல்லது ரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் சேரும்போது, சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்படுவது, அதிக தாகம், சோர்வு நிலை மற்றும் பசி உணர்வு, உடல் எடை குறைவது, கண் பார்வை மங்குவது, காயங்கள் ஆறுவதில் தாமதம் ஏற்படுதல், அடிக்கடி நோய்க் கிருமிகளின் தொற்று ஏற்படுதல், உள்ளங்கை மற்றும் பாதங்கள் மரத்துப்போதல் ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும்.

அதிக உடல் எடை, ரத்த அழுத்தம், உடற்பயிற்சியின்மை, ஊட்டச்சத்து இல்லாத உணவைச் சாப்பிடுதல், மனஅழுத்தம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது போன்ற பல காரணங்களால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

தடுக்கும் வழிகள்

சர்க்கரை நோய் வந்தபிறகு ஆயுளுக்கும் கவனமாக இருப்பதைவிட, முன்பே முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் அதிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை நோய் வராமல் தடுக்க சில ஆரோக்கியமான உணவு வகைகளை கட்டாயம் சேர்த்துக்கொள்வதுடன், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்.

ஆயுர்வேதத்தின்படி, சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் மூலிகைச் சிகிச்சையாக, தினமும் மஞ்சளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் சர்க்கரையின் அளவை எளிதில் குறைக்கலாம்.

மேலும் தினமும் வேப்ப இலையை அரைத்து, ஓர் உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால், அது இன்சுலின் சுரப்பை அதிகமாக்கி, சர்க்கரை நோயைக் குறைக்கும்.

தினசரி யோகா செய்துவந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை மற்றும் சர்க்கரை நோயின் பாதிப்பு குறையும். யோகா செய்வதால், அது மனஅழுத்தத்தைக் குறைத்து, இன்சுலின் செயல்பாட்டைச் சீராக்க உதவு கிறது.

ஆசனப் பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் வயிற்றுத் தசைகள் சுருங்கி, கணையம் மற்றும் இன்சுலின் சுரப்பை அதிகமாக்கி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கிறது.

 

Leave a Reply