shadow

கான்கிரீட் தெரியும், பயோ கான்கிரீட் தெரியுமா?

இன்றைய நாட்களில், தொழில்நுட்பங்கள் கட்டுமான முறையை ஒரு புதிய உயர்வான தளத்திற்குக் கொண்டுசென்றுள்ளன. ஆனால் தவறான கையாளல் மற்றும் தேர்ச்சியற்ற தொழிலாளர்கள் போன்ற பல காரணங்களால், கட்டிடத்தின் ஆயுட்காலத்தை வெகுவாக் குறைகிறது. கட்டுமான முகட்டுத் தளச் சாய்வு, விரிசல்கள், கசிவுகள் மற்றும் வளைதல் போன்ற பல பிரச்சினைகள் வீடு கட்டிய பின் நிகழ்கின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு, பல குறை தீர்க்கும் வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

எல்லாக் கட்டிடங்களிலும் காணப்படும் பொதுவான பிரச்சினை, விரிசல்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றைக் கீழே பார்ப்போம்;

வெப்ப வேறுபாட்டால், கான்கிரீட் சுருங்கி, விரிவது

கட்டிட அமைப்பின் அமிழ்வு

அளவுக்கதிகமான முறையில் ஏற்றப்படும் பாரம்

நீர்க் குறைபாட்டால், கான்கிரீட்டின் மேற்புறம் சுருங்குதல்

கான்கிரீட் அமைக்கும் நேரத்தில் போதுமான அளவு நிரப்பாமல் இருத்தல்

கான்கிரீட் பணியின்போது, அதை ஒழுங்காக மூடி வைக்காமல் இருத்தல்

அதிகமான விகிதாச்சாரத்தில் கலக்கப்படும் தண்ணீர் சிமெண்ட் கலவை

கட்டுமான கம்பிகளில் ஏற்படும் அரிப்பு

உறுதிக்காகக் கலக்கப்டும் பல ரசாயனப் பொருட்களால் ஏற்படும் சுருக்கம்,

பயோ கான்கிரீட்

இப்படி விரிசல்கள் ஏற்படுவதற்கு முன்பு அதைத் தவிர்ப்பதற்கும், ஒருவேளை விரிசல் ஏற்பட்டால் அதைச் சரி செய்வதற்கும் பல தீர்வுகள் உள்ளன. அந்தத் தீர்வுகளில் ஒன்று பயோ கான்கிரீட். அதென்ன பயோ கான்கிரீட்?

இந்த பயோ கான்கிரீட், தனக்குள் இருக்கும் பாக்டீரியா நிகழ்த்தும் விளைவுகளின் உதவியுடன், வீடுகளில் ஏற்படும் வெடிப்புகளையும், விரிசல்களையும், தானே நிரப்பிச் சரிசெய்து கொள்ளும்.

நீங்கள் நன்கு கவனித்தீர்கள் என்றால், அடிக்கடி நிகழும் வெயில் மற்றும் மழை சுழற்சிகளால், 0.05 – .1மிமி அளவிலான விரிசல்கள் தானாகவே மூடிக்கொள்வது தெரியவரும். இந்த மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது? விரிசல் வழி உட்புகும் நீர், சிமெண்ட் உடன், கலந்து, அதை விரிவடையச் செய்வதால், ஏற்படும் மிக எளிய நிகழ்வு இது.

ஆனால் விரிசலின் அளவு பெரியதாக இருக்கும்போது, இது நிகழ்வதில்லை. அப்போது வேறு வழிமுறைகள் அதற்குத் தேவைப்படுகின்றன. அப்படியான வழிமுறையில் ஒன்றுதான் தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் இந்த பயோ கான்கிரீட், இந்த பயோ கான்கிரீட்டில் கனிமத்தை உற்பத்திசெய்யும் பாக்டீரியா உள்ளது. இந்த வகை கான்கிரீட்டில் இருக்கும் பாக்டீரியா அமிலத்தை உற்பத்திப் பண்ணும் தன்மைகொண்டவை. இந்த பாக்டீரியா, சுமார் 200 வருடங்களுக்கும் மேலாக, செயலற்ற உயிரணுவாக, வறண்ட நிலையிலும் வாழும் திறன் கொண்டவை. இந்த பாக்டீரியாதான் விரிசல்களைச் சரிசெய்வதற்கு உதவியாக உள்ளன.

கான்கீரிடை உருவாக்கும்போது, பாக்கிலூஸ் எனும் சிறப்பு வகை பாக்டீரியாவும் கால்சியம் சார்ந்த ஒரு தாதுப் பொருளும் கான்கிரீட் கலவையில் கலக்கப்படுகின்றன. பின்னாளில் கட்டிடத்தில் விரிசல் ஏற்படும்பொழுது, அந்த விரிசல் வழி நுழையும் நீர், அந்தப் பாக்டீரியாவை துளிர்க்கச் செய்கிறது. அந்த பாக்டீரியா ஆக்சிஜனைச் சுவாசிப்பதன் மூலம், அதில் உள்ள கால்சியம் தாதுப்பொருளைக் கரைக்க முடியாத சுண்ணாம்புக் கல் கலவையாக மாற்றுகிறது. இந்தக் கரைசல் பின் கடினமாகுவதன் மூலம் விரிசலை அடைக்கிறது.

இந்த முறையில் உள்ள சாதகமான மற்றுமொரு அம்சம் என்னவென்றால், கால்சியத்தைச் சுண்ணாம்புக் கல்லாக மாற்றுவதற்கு, பாக்டீரியாவானது, ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதால், கட்டுமானக் கம்பிகள் துருப்பிடிப்பது தவிர்க்கப்படுகிறது. இதனால் கட்டிடத்தில் உபயோகிக்கப்படும் இரும்புக் கம்பிகளின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது.

செயல்படுத்தும் முறை

இந்த பாக்டீரியா மற்றும் கால்சியம் தாதுப்பொருளை, கான்கிரீட் கலவையுடன் நேரிடையாகக் கலக்கலாம். அல்லது பாக்டீரியா மற்றும் கால்சியம் தாதுப்பொருளை, களிமண்ணில் குழைத்து, சிறு சிறு உருண்டைகளாக்கி, அதை கான்கிரீட் கலவையுடன் கலக்கலாம். நேரிடையாகக் கலப்பதைவிட, உருண்டை வடிவம் சற்று அதிகச் செலவு பிடித்தாலும், இந்தச் சிறு உருண்டை வடிவம்தான் பொதுவாக நடைமுறையில் உள்ளது.

பயோ கான்கிரீட்டின்

சாதகமான அம்சங்கள்;

வெளிப்புற உதவியின்றித் தன்னைத் தானே சரிசெய்துகொள்கிறது

சாதாரண கான்கிரீட்டைவிட இந்த வகையானது, அதிக அழுத்தம் தரக்கூடியது. அதே நேரம் நெகிழ்வுத் தன்மையும் கொண்டுள்ளது.

உறையும் மற்றும் உருகும் தன்மையில் இருந்து காக்கிறது

இரும்புக் கட்டுமானக் கம்பிகள் துருப்பிடிக்காமல் பாதுகாக்கிறது.

பாகிலூஸ் பாக்டீரியா, மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் தன்மையற்றது.

பயோ கான்கிரீட்டின்

பாதகமான அம்சங்கள்;

வழக்கத்தில் உள்ள கான்கிரீட்டைவிட இது இரண்டு மடங்கு அதிக விலை கொண்டது.

பாக்டீரியாவின் வளர்ச்சி எந்தச் சுழலுக்கும் நல்லது கிடையாது.

கான்கிரீட் கொள்ளளவில் 20 சதவீதத்தை இந்தக் களிமண் உருண்டை எடுத்துக் கொள்வதால், அது அந்த கான்கிரீட்டின் பலவீனப் பகுதியாக மாறுவதற்கு வாய்ப்புண்டு.

இந்த கான்கிரீட் கலவையின் வடிவமைப்பு முறைக்கு, IS codeல் இன்னும் எந்த தரக்கட்டுப்பாடும் இல்லை.

கால்சியம் கரைசலின் தரத்தைச் சோதனைச் செய்வதற்கு செலவு அதிகம்.

இனிவரும் நாட்களில் இதன் பாதகங்கள் முற்றிலும் களையப்படக்கூடும். தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் கட்டுமானத் துறைக்கு இந்த வருங்காலத்திற்கு உரிய நவீனத் தொழில்நுட்பம் வரப்பிரசாதம்தான்.

Leave a Reply