shadow

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வரலாறு

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் இருக்கும் இடம் முன் காலத்தில் தானியங்கள் விளையும் காடாக இருந்தது. ஸ்ரீமூலம் திருநாள் மன்னர் காலத்தில் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டது. அப்போது கன்னியாகுமரி பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. மன்னர் ஆட்சி நடந்தது. தாராசூரன் என்ற அரக்கன் தனக்கு நிகர் யாருமில்லை என்ற அகம்பாவத்தில் வாழ்ந்து வந்தான்.

அவன் சிவபெருமானை வழிபட்டு கடும் தவம் செய்து இறைவனை வணங்கி நிற்க சிவபெருமான் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு அரக்கன் நான் கடலுக்கு அப்பால் கோட்டை கட்டி அங்கே தேவர்கள், முனிவர்கள் அனைவரும் என்னை வணங்கி பணிவிடை செய்து ஏவல் செய்ய வேண்டும். மேலும் எனக்கு தேவர்களாலும் மனிதர்களாலும் மற்றுமுள்ள விலங்குகளாலும் மரணம் ஏற்படக் கூடாது என்று ஈசனிடம் கனிந்து கேட்டுக் கொண்டான். அவன் கேட்டது போல் பகவான் அவனுக்கு வரங்களை அளித்தார். வரங்களைப் பெற்ற மமதையில் அன்னை உமாதேவியை மதிக்காமல் வணங்காமல் ஏளனமாக பேசினான்.

7 கன்னியர்கள் போரிட்டனர் :

இதைக் கண்ட தேவி கடும் கோபமுற்று சாபமிட்டாள். அன்னையின் சாபத்தை ஏளனமாக கருதிய அவன் கடும்கோபத்துடன் தேவர்கள், முனிவர்கள், நவக்கிரகங்கள் மற்றுமுள்ள அனைவரையும் கொடுமைகள் செய்து துன்புறுத்தி வந்தான். இந்த நிலையில் தாராசூரனின் கொடுமைகள் தாங்காமல் அன்னை பார்வதிதேவியிடம் அனைவரும் தங்கள் துன்பங்களை சொல்லி கண்கலங்கி நின்றனர்.

இதை கேட்ட உடன் அன்னை கொதித்து எழுந்து ஈஸ்வரனை வணங்கி தாரகனின் அக்கிரமங்களை எடுத்து சொல்லி இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கு வேண்டினாள். இதைக் கேட்ட இறைவன், தேவி! இந்த உலகத்தில் இருக்கும் எந்த ஆணினாலும் அவர்களது படைகளாலும் என்னை கொல்லக்கூடாது என்ற வரத்தை பெற்றவன் அவன்.

ஆதலால் அவனை அழிப்பதற்கு என்னால் இயலாது. தேவி உன்னுடைய அம்சத்தில் 7 கன்னியர்களை உருவாக்கி அனுப்புவோம். இதைக் கேட்ட தேவி சர்வசக்தியுமான 7 கன்னியர்களை பிறப்பித்து அவர்களுக்கு தகுந்த ஆயுதங்களையும் கொடுத்து அனுப்பினாள். அவர்கள் 7 பேரும் பூலோகம் வந்து தாராசூரனின் படைகளோடு போர் செய்தனர். கடுமையான போர் நடைபெற்ற போதிலும் தாரகனின் படைகளை அழிக்க முடியவில்லை. தாரகனின் படைகள் தரையில் சாய்ந்தாலும் அடுத்த நிமிடம் மீண்டும் உயிர்பெற்று எதிர்த்து நின்றனர்.

தவக்கோலத்தில் தேவி :

தெய்வ கன்னியர்களால் தாராசூரனை அழிக்க முடியவில்லை. இதைக் கண்ட தெய்வ கன்னியர்கள் 7 பேரும் துயருற்று என்ன செய்வது? என்று தடுமாறி நின்றனர். தேவலோகம் சென்றாலும் அவமானம் என்று நினைத்து அவர்கள் பூலோகத்தில் சோட்டாணிக் கரை, கொடுங்கல்லூர், செங்கண்ணூர், மண்டைக்காடு ஆகிய பல இடங்களில் கோவில் கொண்டனர். தெய்வ கன்னியாகிய பராசக்தியின் அம்சமான குமரி பகவதி தேவலோகம் செல்ல மறுத்து கடலின் அருகில் இருக்கும் சீவலப்பாறை என்னும் இடத்தில் வந்து மறைவாக பல வருடங்களாக கடும் தவக்கோலத்தில் இருந்து வந்தாள். வருடங்கள் பல கடந்தது.

வாணாசூரன் முதலான அசுரர்களை அழிப்பதற்கு தக்க தருணங்களை எதிர்பார்த்து நின்றாள். குமரியை அடுத்த பக்கத்து ஊரான கடற்கரையை அடுத்த வாவத்துறை என்ற ஊரை சேர்ந்த மீனவ தாயார் ஒருவர் அந்த சீவிலிப் பாறைக்கு சென்ற போது அந்த தாயாருக்கு பகவதி அன்னை சிறுமியாக காட்சி கொடுத்தாள்.

தேவி அந்த அம்மாளை பார்த்து அம்மா! என்னை உன் பெட்டியில் எடுத்துக் கொண்டு கரையில் விடுவாயா? என்று கேட்டாள். அதற்கு அந்த தாயார், நான் உன்னை கூடையில் வைத்து எடுத்து செல்கிறேன். இப்போது ஆலயம் இருக்கும் இடமானது அப்போது பருத்தி விளையும் இடமாக இருந்தது. அந்த இடத்தில் இருப்பதற்கு எண்ணம் கொண்ட தேவி சுமையை உண்டாக்கினாள். தான் சுமந்து வந்த கூடையை அந்த இடத்தில் இறக்கி வைத்து குழந்தையை இறக்கினாள். தான் சுமந்து வந்தது குழந்தையல்ல தேவி என்பதை புரிந்து கொண்ட பெரியவள் அன்னையை வணங்கி நின்றாள்.

சூரன் வதம் :

அன்னை அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டாள். குமரி பகவதி மறைந்த பருத்தி விளையானது. தேவி அந்த விளையின் உரிமையாளரான சான்றோருக்கு தான் வந்திருப்பதை காட்சி கொடுத்தாள். அவரால் அன்னைக்கு பணிவிடை செய்யப்பட்டு அங்கு அன்னை கோவில் கொண்டாள்.

வாணாசூரன் முதலானவர்களை வதம் செய்வதற்கு அதற்கு இசைந்த புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் நவமி வரை உள்ள 9 நாட்களில் முன் பகவானால் வதம் செய்வதற்கு கொடுத்து அனுப்பிய ஆயுதங்களை பூஜையில் வைத்து விஜயதசமி அன்று பூஜை செய்த பின் தனக்கு துணையாக அம்பும் வில்லும் சுமப்பதற்கு சான்றோர்களின் பரிவாரங்களும் நாதஸ்வர இசை முழங்க மேளதாளங்களுடன் அன்னை ஆண் போல் உடை அணிந்து குதிரை மேலேறி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு ஆக்ரோசத்துடன் மகாதானபுரம் கிராமத்தின் அருகில் வைத்து கொடியவன் சூரனிடம் போர் புரிந்து அவனையும் அவனது ஆய பலங்களையும் சில நிமிடங்களில் அழித்து வெற்றிக்கொடி புனைந்து கடலில் நீராடி முன் போலவே வந்து நின்று தவக்கோலம் கொண்டாள்.

மேலும் சீவிலிப் பாறையில் தேவி சின்னக் குழந்தையாக உருவத்தில் வாழ்ந்த போது தவம் செய்து ஓடி ஆடி விளையாடிய அம்பிகையின் கால் தடம் உள்ளது. அந்த கால் தடம் விவேகானந்தா கமிட்டியினரால் விளக்கேற்றி பூஜைகள் செய்யப்பட்ட் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. சூரன் வதம் முடிந்து வாகனத்தில் வெற்றி நடை போட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி அன்னை கன்னியாகுமரி கோவில் வந்து தவக்கோலம் அடைந்தாள்.

Leave a Reply