shadow

எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்த படத்தில் ஜான்வி?

‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2 ஆகிஅ இரண்டு பாகங்களின் மூலம் இந்தியத் திரையுலகில் பெரும் சாதனையைப் படைத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவருடைய இயக்கத்தில் அடுத்து உருவாக உள்ள படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா இருவரும் கதாநாயகர்களாக நடிக்க உள்ளார்கள். இந்த படத்தின் நாயகிகள் யார் என்பது குறித்து இன்னும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

சில தினங்களுக்கு முன்பு அந்தப் படத்தில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டார் என்றும் செய்திகள் பரவின. ஆனால், ராஜமவுலி இயக்கிய ‘நான் ஈ’ படத்தில் ஏற்கனவே நடித்த சமந்தா ஏன் நடிக்க மறுக்கப் போகிறார் என்றும் சொன்னார்கள்.

இதனிடையே, இந்தியில் கடந்த வாரம் வெளிவந்து வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் ‘தடக்’ படத்தின் அறிமுக நாயகி ஜான்வி கபூர், ராஜமவுலி படத்தில் நாயகியாக நடிக்கலாம் என ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது. ஜான்வியின் அம்மா ஸ்ரீதேவி, தென்னிந்திய மொழிகளில் நடித்து பெயர் வாங்கிய பிறகுதான் ஹிந்தியில் அறிமுகமாகி நம்பர் 1 நடிகையாக உயர்ந்தார்.

ஜான்வியின் முதல் படம் கூட தமிழ் அல்லது தெலுங்கில் தான் இருக்கும் என்றார்கள். ஆனால், அவர் ஹிந்தியில் தான் அறிமுகமானார். ராஜமவுலியின் அடுத்த படத்தில் ஜான்வி நடித்தால் தென்னிந்திய மொழிகளிலும் அவருக்கு சிறந்த அறிமுகம் கிடைக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply