shadow

இந்தியாவுக்கு விரைவில் வருகிறது மின்சார கார்

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோலுக்கு என ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு விரைவில் மின்சார கார் வரவுள்ளது.

நெடுந்தூர பயணங்களை மேற்கொள்வோர் சவுகரியமாக பயணம் செய்ய ஆரம்பக்கட்டத்தில் நிலக்கரியில் இயங்கிய நீராவி என்ஜின் பொருத்திய ரெயில்களில் பயணம் செய்தோம். நீராவி என்ஜின் கொண்ட ரெயில்கள் அதிகளவு கரித்துகள்களை வெளியிட்டதில் இருந்து டீசல் என்ஜின்கள் நம்மை மீட்டெடுத்தன. டீசல் என்ஜினிலும் சுற்றுச்சூழல் மாசு இருப்பது தெரியவர, அதற்கு மாற்றாக மின்சார ரெயில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்பக் காலத்தில், சென்னை நகரில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரெயில்களின் வேகம் அதிகரித்து இருப்பதோடு, சுற்றுச்சூழல் மாசு கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எனினும், புவி வெப்பநிலை அபாய அளவை நெருங்கிக்கொண்டு இருப்பதால், சாலைப்போக்குவரத்திலும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரம் மூலம் வாகனங்களை இயக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க முடியும். மேலும், எரிபொருள் இறக்குமதியை குறைத்து அன்னிய செலாவணியையும் மிச்சப்படுத்த முடியும் என்று அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு 2030-ம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இப்போதே மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வேலையைத் தொடங்கி விட்டன. ஹூண்டாய், ரெனால்ட், டொயோட்டா, சுசுகி, மஹிந்திரா, டாடா போன்ற நிறுவனங்கள் 2020-ம் ஆண்டுக்குள் மின்சார கார்களை அறிமுகப்படுத்தும் வகையில் தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளன.

டொயோட்டாவும், சுசுகியும் இணைந்து இந்தியாவுக்கான மின்சார கார்களை தயார் செய்கின்றன. இதற்கான தொழில்நுட்பத்தை டொயோட்டா வழங்க, சுசுகி நிறுவனம் கார்களை வடிவமைக்கும் பணிகளை ஏற்று இருக்கிறது.

ரெனால்ட் நிறுவனம் சீனச்சந்தையில் விற்பதற்காக குறைந்த விலையிலான மின்சார கார்களை தயாரித்து வருகிறது. ‘ரெனால்ட் க்விட்’ எனப்படும் இந்த காருக்கு சீனச்சந்தையில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் இது ஏற்றுமதி செய்யப்படும்.

மஹிந்திரா நிறுவனம் KUV100 மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பை உருவாக்கி வருகிறது. இதன் பரிசோதனைகள் முடிந்து இந்த ஆண்டே கார் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, ‘XUV500’ என்ற மாடல் எலெக்ட்ரிக் காரையும் மஹிந்திரா தயாரிக்கிறது.

டாடா நிறுவனம், டாடா டிகோர், டாடா டியாகோ ஆகிய இரு மாடல் மின்சார கார்களை உற்பத்தி செய்கிறது. இவை அடுத்த ஆண்டுக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் மின்சார கார் (ஹுண்டாய் கோனா) பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு இதை விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இவை எல்லாம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் தேவை வெகுவாக குறைந்து விடும். மேலும் அவற்றின் விலை உயர்வு குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

Leave a Reply