shadow

அரசுப் பள்ளிகளில் ரூ.48 கோடியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி: அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 2,448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.48.96 கோடியில் பாதுகாக்கப்பட்ட தூய்மையான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் நலன் கருதி குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக குடிநீர் வசதிகள் தேவைப்படும் 2,448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.48 கோடியே 96 லட்சம் செலவில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதனை சட்டப்பேரவையில் கடந்த ஜூன் மாதம் 1 -ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி ஒரு குடிநீர் சுத்திகரிப்பு கருவியின் விலை ரூ.2 லட்சம். ஒரு பள்ளிக்கு ஒரு சுத்திகரிப்பு கருவி வீதம் 2,448 பள்ளிகளுக்கு ரூ.48.96 கோடி செலவு ஏற்படும். இந்தச் செலவினத்தை அந்தந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து மேற்கொண்டு ஆட்சியர்கள் வாயிலாக இந்த பணிகள் செய்து முடிக்க வேண்டும் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply