shadow

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி. கைது

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி அமெரிக்காவில் நுழையும் அகதிகளையும் அவர்களின் குழந்தைகளையும் பிரித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். டிரம்பின் உத்தரவின் அடிப்படையில், பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்டனர்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனது கொள்கையில் பின்வாங்கிய அதிபர் ட்ரம்ப், பிரிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர்களிடம் ஒப்படைக்க அனுமதித்தார்.

இருப்பினும் டிரம்பின் இந்த குடியேற்ற கொள்கையை எதிர்த்து இந்திய வம்சாவளி எம்.பி. பிரமிளா ஜெயபால் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செனட் சபை வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பிரமிளா உட்பட 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரமிளா, மனிதாபிமானமற்ற மிகவும் மோசமான டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக போராடியதால் தம்முடன் சேர்த்து 500 பெண்களும் கைது செய்யப்பட்டதாகவும், இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு தாம் பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த போராட்டத்தில் பெண்கள் கலந்து கொள்ள வந்ததாகவும், இது அரசியலுக்கு அப்பாற்பட்ட பிரச்சனை என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் பிரமிளா ஜெயபால் என்பதும், அகதிகள் அடைக்கப்பட்ட சிறைக்கு சென்று அகதிகளை சந்தித்த முதல் எம்.பி. என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply